பாலமேடு ஜல்லிக்கட்டு: கேலரியில் அமராமல் வேடிக்கை பார்த்தவர் மாடுமுட்டி உயிரிழப்பு
பாலமேடு ஜல்லிக்கட்டில் கேலரியில் அமராமல் வீதியில் நின்று வேடிக்கை பார்த்தவர் மாடு முட்டி உயிரிழந்தார்.
மதுரை: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கேலரியில் அமராமல் வீதியில் நின்று வேடிக்கை பார்த்த ஒருவர் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
வாடிவாசலில் இருந்து சீறிய காளைகளை அடக்கிய இளைஞர்கள் சிலர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்கவும் ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர்.
இவர்கள் பார்வையிடுவதற்காக தடுப்புகளுடன் கூடிய கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கேலரியில் அமராமல் ஆர்வத்தினால் மாடுகள் வெளியே சென்று சேருமிடத்தில் நின்று வேடிக்கை பார்த்த சிலருக்கும் மாடுகள் முட்டியதில் காயம் ஏற்பட்டது.
இதில் திண்டுக்கல் சாணார்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் படுகாயமடைந்தார். அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.