சிவகாசி: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி- 2 பேர் படுகாயம்
சிவகாசி அருகே வெம்பகோட்டையில் தனியார் பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிவகாசி: சிவகாசி அருகே வெம்பகோட்டையில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் மணிமாறன் என்ற தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே செவல்பட்டியில் ஜெயபிரகாஷ் என்பவரின் பட்டாசு ஆலை உள்ளது. இதில் நேற்று மதியம் 3 மணிக்கு பூச்சட்டிக்கு மருந்து அடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மருந்தில்ஏற்பட்ட உராய்வில் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அறைகள் வெடித்து சிதறின இதில் எட்டூர் மணிமாறன், 32, முத்தால் நாயக்கன்பட்டி வீரபாண்டி, 48, திருத்தங்கல் சுந்தரராஜ், 38 ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலையில் வெடிவிபத்தில் படுகாயமடைந்த மணிமாறன் என்ற தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சுந்தரபாண்டி, சுந்தரராஜ் ஆகியோருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில், வெள்ளிக்கிழமை ராஜாசிங் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் செந்தில், மூர்த்தி இருவரும் பலத்த தீக்காயமடைந்தனர். தகவலறிந்த எம்.புதுப்பட்டி போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கடந்த மாதம் 20 நாட்களுக்கு மேல் பட்டாசு ஆலை வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இப்போதுதான் செயலபடத்தொடங்கியுள்ள நிலையில் வரிசையாக விபத்துகள் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.