திருத்துறைப்பூண்டி அருகே மினி பேருந்து குளத்தில் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி-40 பேர் படுகாயம்
திருத்துறைப்பூண்டி அருகே ஏற்பட்ட தனியார் பேருந்து விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் போட்டி போட்டுக் கொண்டு இயக்கப்பட்ட தனியார் பேருந்துகளில் ஒன்று, குளத்தில் பாய்ந்ததில் முதியவர் ஒருவர் பலியானார்.
ஏஆர்எஸ் தனியார் நிறுவன பேருந்து குன்னலூரிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு வந்துகொண்டிருந்தது. அப்போது, எஸ்ஆர்டி என்ற தனியார் நிறுவன பேருந்தும் வழித்தடம் மாறி வந்தது.
பயணிகளை யார் அதிகம் ஏற்றுவது என்பதற்காக இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்றுள்ளனர். இதற்காக வண்டியை வேகமாக இயக்கியுள்ளனர். நெடும்பலம் எனும் கிராமத்தை கடந்தபோது, ஏஆர்எஸ் பேருந்து கள்ளுக்குடி குளத்தில் பாய்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 40 பயணிகளும் நீரில் தத்தளித்தனர்.
தகவலறிந்து வந்த திருத்துறைப்பூண்டி தீயணைப்பு குழுவினர், பயணிகளை பத்திரமாக மீட்டனர். எனினும் குன்னலூரைச் சேர்ந்த வேலாயுதம் என்ற முதியவர் பலியானார். காயமடைந்த 40 பயணிகள் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான பேருந்தின் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.