பேட்டியளித்த ஜார்ஜ்.. அவசரமாக முதல்வரை சந்தித்த விஜயபாஸ்கர்.. அரை மணி நேரத்தில் நடந்த அல்லோகலம்
முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய அதே நேரத்தில், அமைச்சர் விஜயகுமார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார்.
Recommended Video
சென்னை: முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய அதே நேரத்தில், அமைச்சர் விஜயகுமார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. விஜயபாஸ்கர் பதவி விலகி போகிறாரா என்றும் சந்தேகம் இதனால் எழுந்துள்ளது.
குட்கா ஊழல் தொடர்பாக இரண்டு நாள் முன் தமிழகத்தில் சிபிஐ திடீர் என்று ரெய்டு நடத்தியது. குட்கா விவகாரம் வெடித்துள்ள நிலையில் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
தகவல் வந்தது எப்போது
முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மதியம் 2.30 மணிக்கு நேற்று பேட்டியளித்தார். இதற்காக செய்தியாளர்கள் முன்பே தயாராக இருந்தனர். நிறைய கேள்விகளும் தயாரிக்கப்பட்டு இருந்தது. அவர் அரசுக்கு எதிராக புகார் வைக்க போகிறார் என்று எல்லோருக்கும் தெரிந்தது. இந்த தகவல் 1.35 மணிக்கே செய்திகளிலும் வந்துவிட்டது.
வேகவேகமாக சென்றார்
இந்த நிலையில்தான் மதியம் 1.50க்கு எல்லாம், அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் பழனிசாமியை சந்திக்க சென்று இருக்கிறார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் வசிக்கிறார். அதே பகுதியில்தான் முதல்வரும் வசிக்கிறார். இதனால் வேகவேகமாக காரில் சென்ற விஜயபாஸ்கர் , எடப்பாடி பழனிசாமியை 2 மணிக்கு சந்தித்துள்ளார்.
மிகவும் தனியாக பேசினார்கள்
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த சந்திப்பு நடந்த போது அந்த அறையில் யாருமே இல்லை. முதல்வரின் பிஏ கூட அறையில் இல்லை என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு மிகவும் ரகசியமான விஷயங்களை விஜயபாஸ்கர், முதல்வரிடம் தெரிவித்துள்ளார் என்று கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் என்ன பேசினார்கள் என்று கூறப்படவில்லை.
ஜார்ஜ் பற்றியும் சில கூடுதல் தகவல்கள்
அதேசமயம் ஜார்ஜ் பேட்டி அளிக்க இருந்ததுதான் இந்த அவசர சந்திப்பிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஜார்ஜ் தன்னுடைய பேட்டியில் அரசு மீது நேரடியாக குற்றச்சாட்டு வைத்த அளவிற்கு விஜயபாஸ்கர் மீது குற்றச்சாட்டு வைக்கவில்லை. ஆனாலும், ஜார்ஜ் பேட்டியை தொடர்ந்து சிபிஐ விசாரணை முடுக்கப்படும், இதனால் விஜயபாஸ்கர் பதவி விலகும் நிலை ஏற்படலாம் என்றும் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.