நடிகர் கமல்ஹாசன் பெயரில் போலி பேஸ்புக்... கோவை ரியல் எஸ்டேட் தரகர் அதிரடி கைது
நடிகர் கமல்ஹாசன் பெயரில் போலி பேஸ்புக் பக்கம் தொடங்கிய கோவை குனியமுத்தூர் ரியல் எஸ்டேட் தரகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கோவை: நடிகர் கமல்ஹாசன் பெயரில் போலியாக பேஸ்புக் பக்கம் தொடங்கி சர்ச்சைக்குரிய படங்களை பதிவிட்ட, கோவை மாவட்டம் குனியமுத்தூர் ரியல் எஸ்டேட் தரகர் மன்சூர்அலி கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் அதே பகுதியில் மெடிக்கல் ஷாப் வைத்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு உக்கடம் அல்-அமீன் காலனியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகர் மன்சூர்அலி பழக்கமானார்.
இவரிடம் ரவி, நிலம் வாங்கிக் கொடுக்க கேட்டுள்ளார். அதன்படி மன்சூர் அலி ரவிக்கு நிலம் வாங்கிக் கொடுத்துள்ளார். அதில், இருவருக்கும் கமிஷன் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால், கூடுதலாக பணம் தர வேண்டும் என்று ரவியை, மன்சூர் அலி தொடர்ந்து மிரட்டி வந்தார்.
இதனால் ரவியும் அவரின் குடும்பத்தாரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்தனர். இந்த நிலையில் ரவி கோவையில் நடைபெற்ற விபத்தில் அகால மரணம் அடைந்துவிட்டார் என்று, அவரின் புகைப்படத்துடன் பேஸ்புக் பக்கம் ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது.
மேலும், ரவியின் மகளான 8 வயது சிறுமியும் மாயமாகிவிட்டார் என்றும், அவரை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் முகநூல் மற்றும் வாட்ஸ்-அப்பில் சிறுமியின் புகைப்படத்துடன் தகவல் வெளியிடப்பட்டு பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
பேஸ்புக்கில் இந்த விசயங்களை பார்த்தவர்களும், கேள்விப்பட்டவர்களும் ரவியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, துக்கம் விசாரித்தனர். இதில் அதிர்ச்சியான ரவி, போலீசில் புகார் செய்தார். இது குறித்து விசாரித்த போலீசார், சர்ச்சைக்குரிய பேஸ்புக் கணக்கு நடிகர் கமல்ஹாசனின் பெயரில், கமல்ஹாசன் படத்துடன் போலியாக உருவாக்கப்பட்டு இருந்தது கண்டுபிடித்தனர். மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் மன்சூர் அலி, இது போன்ற சர்ச்சையை ஏற்படுத்தியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு மன்சூர் அலி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் கோவை மாவட்ட கமல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.