கே.பி எனும் கே.பாலச்சந்தர்.. என்றும் பிரம்மாண்டமாய்.. ஒய்யாரமாய்.. மறக்க முடியாத இயக்குநர் சிகரம்!
இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் பிறந்தநாள் விழா இன்று.
Recommended Video
சென்னை: இந்திய துணை கண்டத்தின் கலைத்துறையில் குறிப்பாக திரைப்படத் துறையில் தமிழகம் ஓரளவு தலைநிமிர்ந்து நிற்க முடியும். அதிலும் தொழில்நுட்பம் - உள்ளடக்கம் - நடிப்பு என்று வருகின்றபோது தயக்கமே இல்லாமல் சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம். சினிமா என்ற அந்த சட்டையின் காலர்தான் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர். இன்று அவரது பிறந்தநாளில் அவர் நிகழ்த்திய பல வெற்றிகளில் ஒருசிலவற்றை நினைவுகூர்வதை பெருமிதமாக கொள்கிறோம்.
வெண்திரையை சோதனைக்கூடமாக்கி, சாதனை பலவற்றை நிகழ்த்தியவர் பாலச்சந்தர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அதை புதுப்பித்தவர். ஆரம்பத்திலிருந்தே கடைசி வரை ஒவ்வாரு படத்திலும் வித்தியாசமான முயற்சியை பரீட்சார்த்தமாக செய்து பார்க்கலாம் என்ற பாணியிலேயே அவரது திரைப் பயணம் அமைந்திருந்தது.
அன்றாட வாழ்க்கையிலிருந்தும், நடைமுறை சமூகத்திலிருந்தும் சில பிரச்சனை கருவாக கொண்டு கலாப்பூர்வமாக படைத்தளித்தவர் பாலச்சந்தர். எண்ணிக்கையில் கணிசமான உள்ள மத்திய தர வர்க்கத்தின் ஆசை, அபிலாஷைகளை, கோபதாபங்களை, வறட்டு கௌரவங்களை, இயலாமையை உள்ளடக்கிய, மண்ணுக்குரிய இயல்பாய் அமெச்சூர் நாடகங்களை அரங்கேற்றியவர். புளித்துபோன தமிழ் சினிமாவை புதிய பாதைக்கு அழைத்து வந்தவர்களில் மிக முக்கியமானவர்.
காதலை கையாண்ட விதம்
காதலை பல்வேறு வகையில் வெளிப்படுத்தியவர் என்ற பெருமை பாலச்சந்தருக்கு உண்டு. இந்த உத்திகளும், பாணிகளும், வெவ்வெறு விதமானவை. வித்தியாசமானவை. பாலச்சந்தரின் மாஸ்டர் பீஸ் என்று சொல்லக்கூடிய வெள்ளித்திரை வரலாறு முழுவதும் வியாபித்திருக்கக் கூடிய தமிழகத்திற்கு ஏன் இந்தியாவிற்கே பெருமை தரக்கூடிய படங்கள் சில உண்டு. காதல் விஷயத்தில் மரோசரித்ரா, அரசியல் பிரச்சனையில் 'தண்ணீர் தண்ணீர்', பெண்மையின் உயர்வுக்கு 'நிழல் நிஜமாகிறது', அக்னி சாட்சி, அச்சமில்லை அச்சமில்லை, ஒரு வீடு இரு வாசல் ஆகியவை.
உயிரற்ற கதாபாத்திரங்கள்
அவள் ஒரு தொடர்கதை போன்ற சில திரைப்படங்களை முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கியிருந்தார். அதேபோல, ஒரு சிறப்பு கதாபாத்திரம் எப்போதுமே பாலச்சந்தரிடம் மின்னல்போல பளிச்சிடும். அதுவும் தனி டைட்டில் கார்டில் வந்து போகும், 'இவர்களுடன் அருவி', 'இவர்களுடன் சாலிடர்' என்பது போன்ற உயிரற்ற பொருட்களும் கதாபாத்திரங்களாக உயிர்ப்பித்து தருவார். குறைவான செலவில் நிறைவான படத்தை கொடுக்கும் ஒரு படைப்பாளி என்று திரையுலகம் அவரை பாராட்டியது. நீர்க்குமிழி, பாமாவிஜயம், எதிர்நீச்சல் போன்ற பல படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
பரீட்சார்த்த முயற்சிகள்
ஒரே படத்தை இரண்டாக பிரித்து இரண்டு கதைகளை சொல்லி இறுதியில் இரண்டையும் இணைத்து 'ஒரு வீடு இருவாசல்' படத்தில் புதுவை செய்தார் கே.பி. அதேபோல, "இருகோடுகள்" படத்தில் அண்ணாதுரைக்கு வசனம் மட்டுமே வைத்தது போன்ற பலப்பல பரீட்சார்த்த முயற்சிகள் வெற்றிபெற்றன. இயற்கையை நேசித்தவர். மலையருவியும் கடற்கரையும் இவரது படங்களில் நிச்சயம் இடம்பெறும். அதேபோல ரிவர்ஸ் ஷாட் என்னும் பின்னோக்கி காமிரா இயங்கும் காட்சி ஒன்றாவது நிச்சயம் இடம்பெற்றுவிடும். இது இவரது ட்ரேட் மார்க். அதனால்தான் `அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் நடிகர்களின் பெயர்ப் பட்டியலில் அருவி பெயரையும் சேர்த்தவர்!
மெகா தொடர்களின் முன்னோடி
நையாண்டி, நகைச்சுவை, சமூக சித்திரம், அரசியல், பெண்ணியம் என எல்லா கதைகளையும் தொட்டு எல்லாவற்றிலும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கியவர். 90-களுக்குப் பின்னர், ரயில் சிநேகம்', கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி வெற்றி கண்டவர். தமிழ் சின்னத்திரையில் மெகா தொடர்களுக்கு முன்னோடி என்ற பெருமையும் பாலசந்தரை சாரும்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ள பாலச்சந்தர், இந்தியாவில் திரைப்படத்துறைக்கான மிக உயர்ந்த விருதான 'தாதே சாஹிப் பால்கே' விருது உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாலசந்தர் 2014 டிசம்பர் 23-ல் உயிரிழந்தார்.
தெற்கில் ஒரு சிகரம்
கே. பாலச்சந்தர் - 3 தலைமுறைகளாக பவனி வந்து, தலைமுறை இடைவெளிக்கு இடமில்லாத வகையில் மாறுதல்களை உள்வாங்கி கொள்ளும் ஆற்றல் படைத்தவர். சமுதாயத்தை நேர்செய்யும் மனித குலத்தை சீர்படுத்தும் கருவியாக சினிமாவையும் பயன்படுத்த முடியும் என்பதை நடைமுறையில் நிரூபித்தவர். உறவு சிக்கல்களையும், உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலைமேதை. தன் கடைசி காலம் வரை இளமைத்துடிப்போடு - உயிரோட்டத்தோடு காலத்திற்கும், ரசனைக்கும் ஏற்ப தன்னை புணர்நிர்மானம் செய்து கொண்டவர். இந்தியாவின் வடக்கில் உள்ளதுபோல், தெற்கு பகுதியில் தோன்றிய இந்த "சிகரம்" காலத்துக்கும் உயர்ந்து நிற்கும் - என்றும் பிரம்மாண்டமாய்.. ஒய்யாரமாய்!