தற்போதைய நிலையில் ஸ்டாலின், சகாயம் தலைமைதான் சரியாக இருக்கும்- ஒன் இந்தியா சர்வே
தற்போதைய நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமைதான் சரியாக இருக்கும் என்கின்றனர் ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள்.
சென்னை: தற்போதைய தமிழக அரசியலுக்கு யார் தலைமை ஏற்றால் சரியாக இருக்கும்? என்று நமது ஒன் இந்தியா தமிழ் நடத்திய சர்வேயில் ஸ்டாலினுக்கு முதலிடமும் அவருக்கு சற்று இணையாக ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கும் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. 3வதாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு கிடைத்துள்ளது.
"இன்றைய சூழலில் தமிழக அரசியலுக்கு யார் தலைமை ஏற்றால் சரியாக இருக்கும்?" என்ற தலைப்பிலான சர்வேயில் ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், ரஜினிகாந்த், சீமான், வைகோ, ஈவிகேஎஸ் இளங்கோவன், டிடிவி தினகரன், ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி, தமிழிசை, பொன். ராதா கிருஷ்ணன் மற்றும் சகாயம் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இந்த கருத்து கணிப்பில் மொத்தம் 41,004 பேர் பங்கேற்றனர்.
இவர்களில் மு.க. ஸ்டாலினுக்கு 23.94% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஸ்டாலினுக்கு அடுத்ததாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வரட்டும் என 22.23% பேர் வாக்களித்துள்ளனர்.
சீமான், அன்புமணி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 14.9%; அன்புமணி ராமதாஸுக்கு 6.36% பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
ரஜினிக்கு குறைவுதான்
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கு 5.55% பேரும் ஆதரவு கொடுத்திருக்கின்றனர். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் தலைமை ஏற்கலாம் என்பதற்கு வெறும் 4.62% பேர்தான் ஆதரவு தந்துள்ளனர்.
வைகோ, திருமாவளவன்
மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு 1.95%; விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு 1.74% பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு 1.07% பேர் ஆதரவு கொடுத்திருக்கின்றனர்.
ஈபிஎஸ் நிலைமை..
டிடிவி தினகரன்- 0.72%; ஈவிகேஎஸ் இளங்கோவன்- 0.51%; தமிழிசை- 0.39% பேர்தான் ஆதரவு கொடுத்துள்ளனர். தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமிதான் கடைசி இடம்... அவருக்கு வெறும் 0.33% பேர்தான் ஆதரவு.
வேறு ஒருவருக்கு ஆதரவு
இந்த தலைவர்கள் அல்லாமல் வேறு ஒருவர் என்ற ஆப்சனுக்கும் கணிசமான ஆதரவு கிடைத்துள்ளது. மொத்தம் 15.67% பேர் இந்த ஆப்சனை தேர்வு செய்துள்ளனர்.