சென்னை சிறார் காப்பகத்தில் மீண்டும் 'எஸ்கேப்'.. சிறுமி தப்பி ஓட்டம்- ஓட முயன்ற 2 சிறார்கள் சிக்கினர்
சென்னை: சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் அரசு கூர்நோக்கு பள்ளியில் சிறார்கள் தப்பி ஓடுவது தொடர் கதையாகி வருகிறது. தற்போது சிறுமி ஒருவர் தப்பியோடியுள்ளார். மேலும் தப்ப முயன்ற 2 சிறுவர்கள் பிடிபட்டனர்.
சென்னை, கெல்லீஸ் பகுதியில் அரசு கூர்நோக்கு பள்ளி செயல்பட்டு வருகிறது. சிறு வயதில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார் குற்றவாளிகள் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர். போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், கூர்நோக்கு பள்ளியில் இருந்து அடிக்கடி மாணவர்கள் தப்பித்து ஓடுவது நிகழ்ந்து வருகிறது.
கடந்த ஜூலை 10-ந் தேதி கெல்லீஸ் கூர்நோக்கு பள்ளியில் இருந்த சிறுவர்களிடையே மோதல் ஏற்பட்டது, அப்போது அங்கிருந்து 34 சிறுவர்கள் காம்பவுண்ட் சுவற்றைத் தாண்டிக் குதித்து தப்பித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வீடியோ காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தப்பியோடிய சிறுவர்கள் பலரை காவல்துறையினர் வளைத்துப் பிடித்தனர். அவர்கள் செங்கல்பட்டு சிறார் இல்லத்துக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் இன்று சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் அரசு சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் இருந்து மேலும் ஒரு சிறுமி தப்பியோடியுள்ளார். அதேபோல் தப்பி ஓட முயன்ற 2 சிறுவர்கள் பிடிபட்டனர். போதிய பாதுகாப்பு இல்லாததாலேயே இது போன்ற சம்பவம் நிகழ்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.