காஞ்சிபுரம் அருகே கொடூர விபத்து: அரசு பேருந்துகள் நடுவில் டூவிலருடன் சிக்கிய வாலிபர் பலி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே இரு அரசு பேருந்துகளின் நடுவில் பைக்கில் வந்த வாலிபர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி மாநாகர பேருந்து ஒன்று சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது மாநாகரப்பேருந்தின் ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டு சாலையிலேயே பேருந்தை நிறுத்தியுள்ளார்.
இதில் பேருந்தின் பின்னால் வந்த இருசக்கர வாகனம் மாநகர பேருந்து மீது மோதியுள்ளது. பின்தொடர்ந்து வந்த செய்யாறில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் இரண்டு பேருந்துகளுக்கும் இடையில் சிக்கிய இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
மேலும் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணையில் இரு சக்கர வாகனத்தில் வந்தது திருவண்ணாமலை மாவட்டம், முடையூர் அடுத்த அரும்பலூர் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார்(25) என்பது தெரிய வந்தது.