'உனக்கு மதன் கதிதான்' ... கொலை மிரட்டல் விடுத்ததாக பச்சமுத்து மீது மேலும் ஒரு வழக்கு #pachamuthu
சென்னை: எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவர் பச்சமுத்து மீது மேலும் ஒரு கொலைமிரட்டல் வழக்கு சென்னை உயர்நீதிமான்றத்தில் தொடரப்பட்டுள்ளது.
மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி 112 பேரிடம் ரூ75 கோடி மோசடி செய்தார் என்பது எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பச்சமுத்து மீது வழக்கு. இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பச்சமுத்து.
தற்போது பச்சமுத்து மீது அடுத்தடுத்து மோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. சென்னை சூளையைச் சேர்ந்த மோகன்குமார் என்பவரிடம் 2004ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம். மெட்ரிகுலேசன் பள்ளியின் செலவுக்காக பச்சமுத்து சில நிலப்பத்திரங்களை அடமானமாகக் கொடுத்து 70 லட்ச ரூபாய் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆவணங்கள் போலியானவை எனத் தெரிய வந்ததால், கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி சென்னை மாம்பலத்தில் உள்ள பச்சமுத்துவின் அலுவலகத்துக்குச் சென்று மோகன்குமார் கேட்டபோது, மதனுக்கு ஆன கதிதான் உனக்கும் ஆகும் என்று பச்சமுத்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வேப்பேரி காவல்நிலையத்திலும், சென்னை மாநகரக் காவல்நிலையத்திலும் மோகன்குமார் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாகப் பச்சமுத்துவிடம் காவல்துறையினர் இன்னும் விசாரிக்காத நிலையில், பச்சமுத்து மீது போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யக் கோரி, மோகன்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது. இதனிடையே வேந்தர் மூவிஸ் மதன் மூலம் ஏழரை கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக சினிமா பைனான்சியர் போத்ரா அளித்த புகார் தொடர்பாக தனக்கு முன்ஜாமீன் கோரி பச்சமுத்து மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை அமர்வு நீதிமன்றத்தில் பச்சமுத்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.