ஓஎன்ஜிசி புகார்.. கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான 10 பேர் மீது மேலும் ஒரு வழக்கு
தஞ்சாவூர்: கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான 10 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீது மேலும் ஒரு வழக்கை காவல்துறை பதிவுசெய்துள்ளது.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி சார்பில் பெட்ரோலியப் பொருட்கள் எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் போராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே தமிழக அரசு பொய் வழக்கு போட்டு உள்ளதாகவும், இந்த வழக்கை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், கைதான அனைவரையும் ஜாமீனில் விடுதலை செய்ய கோரியும், தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் போராட்டக்குழு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் போராட்டத்தால் அரசுக்கு ரூ.3 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த அரசு அதிகாரிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கதிராமங்கலத்தில் மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவில்லை. இதனால் 10 பேருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில் கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் மீது மேலும் ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது. ஓஎன்ஜிசி அளித்த புகாரின் பந்தநல்லூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.