சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது மேலும் ஒரு மோசடி புகார்!
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது தயாரிப்பாளர் வெங்கடேசன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது தயாரிப்பாளர் வெங்கடேசன் என்பவர் மோசடி புகார் அளித்துள்ளார்.
நடிகர் சசிகுமாரின் மைத்துனரான அசோக்குமார் அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த கடன் தொல்லையே தற்கொலைக்கு காரணம் என அவர் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அசோக்குமார் உயிரிழந்து 2 வாரங்கள் ஆகியும் போலீசாரால் அன்புச்செழியனை நெருங்க முடியவில்லை. இந்நிலையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் அவரது சகோதரர் அழகர் ஆகியோர் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அன்புச்செழியன் மற்றும் அவரது சகோதரர் அழகர் ஆகியோர் மீது சென்னை மாநகர காவல் ஆணைய அலுவலகத்தில் தயாரிப்பாளர் வெங்கடேசன் என்பவர் இந்த புகாரை தெரிவித்துள்ளார். அன்புச்செழியன் மீதான புகார்கள் அதிகரித்து வருவதால் அவருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.