தாறுமாறாக சிதறும் அதிமுக.. வைகைச் செல்வன் தலைமையில் மேலும் ஒரு கோஷ்டி?
அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தலைமையில் புதிய கோஷ்டி உருவாகியுள்ளது.
சென்னை: முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தலைமையில் அதிமுகவில் மேலும் ஒரு கோஷ்டி உதயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக மூத்த நிர்வாகிகள் வைகை செல்வன் தலைமையில் தனியே ரகசிய ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரண்டாக உடைந்துள்ளது. இதில் ஈபிஎஸ் அணியும் பல கோஷ்டிகளாக சிதறுண்டு வருகிறது.
தோப்பு கோஷ்டி
கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள், தலித் எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே தனித் தனியாக ஆலோசனை நடத்தி பரபரப்பை கிளப்பினர். இதனைத் தொடர்ந்து தோப்பு வெங்கடாசலம் தலைமையில் 11 எம்.எல்.ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்தினர்.
செந்தில் பாலாஜி
இந்த தோப்பு கோஷ்டியை இயக்குவதே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிதான் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தலைமையில் திடீரென அதிமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் ரகசிய ஆலோசனை நடத்தி பரபரப்பை கிளப்பியுள்ளனர்.
வைகைச் செல்வன்
சென்னையில் கடந்த சில நாட்களாக இந்த கோஷ்டியின் ரகசிய ஆலோசனை தொடருகிறது. அதிமுகவில் தங்களுக்கும் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட வேண்டும்; இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் வலியுறுத்துவோம் எனவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
எடப்பாடி அரசுக்கு நெருக்கடி
அதிமுகவில் எந்த திசையில் இருந்து எந்த கோஷ்டி கிளம்பும் என தெரியாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.