எந்த நேரத்திலும் ஜெ. சமாதி விசிட்? அதிமுகவில் விரைவில் வெடிக்கப் போகிறதா புதிய தர்மயுத்தம்?
அதிமுகவில் ஈபிஎஸ் அணிக்கு எதிரான ஓபிஎஸ் தரப்பு மீண்டும் போர்க்கொடி தூக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: அதிமுகவின் ஈபிஎஸ் அணிக்கு எதிராக மீண்டும் ஒரு தர்மயுத்தத்தை ஓபிஎஸ் தரப்பு முன்னெடுக்க சாத்தியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் எந்த நேரத்திலும் சமாதி விசிட், சமாதி தியானம் என எதுவும் நடக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அதிமுக அணிகள் இணைப்பு நடந்தேறிவிட்டாலும் ஓபிஎஸ் தரப்பு கடுமையாக திருப்தியில் உள்ளது. ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டாலும் அதிகாரமற்றவராக மாற்றப்பட்டார்.
விழாவில் அவமதிப்பு
அதுவும் ஆளுநர் பதவி ஏற்பு விழாவில் மேடையில் இருக்கை போடாமல் அமைச்சர்களோடு அமைச்சர்களாக தம்மை உட்கார வைத்தது ஓபிஎஸ் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதையடுத்துதான் டெல்லி சென்று முறையிடுவது என்பதில் தீர்மானமாக இருந்தாராம் ஓபிஎஸ்.
டெல்லி பேட்டியால் அம்பலம்
டெல்லி செல்வதில் முதலில் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்ட நிலையில் மீண்டும் முயற்சித்து பிரதமர் மோடியை சந்தித்துவிட்டார் ஓபிஎஸ். ஆனால் ஈபிஎஸ் மீதான அதிருப்தியில்தான் ஓபிஎஸ், மோடியை சந்தித்தார் என்பதை டெல்லி செய்தியாளர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு அம்பலப்படுத்தினர்.
எந்த முக்கியத்துவமும் இல்லை
ஓபிஎஸ்-க்கு மட்டுமல்ல அவரது அணியினருக்கும் எந்த முக்கியத்துவமும் இணைப்பின் மூலம் கிடைக்கவில்லை. பெயரளவுக்கு இரு அணிகளும் இணைந்திருக்கின்றன அவ்வளவுதான்.
விரைவில் சமாதி படலங்கள்?
இதனால் ஓபிஎஸ் அணியின் 2-ம் கட்ட தலைவர்கள் பலரும் கடுமையான அதிருப்தியில் இருக்கின்றனர். இதனால் ஓபிஎஸ் தரப்பு இன்னொரு தர்ம யுத்தத்தை தொடங்கலாம்; மீண்டும் சமாதி தியானம், பேட்டி படலங்கள் அரங்கேறும் என்றே கூறப்படுகிறது.