6 ஆண்டாக மகனை கட்டாயப்படுத்தி வைத்திருக்கும் ஈஷா... தூத்துக்குடி பெற்றோரும் புகார்
கோவை: ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் 6 ஆண்டாக கட்டாயப்படுத்தி வைத்திருக்கும் மகனை மீட்டுட்த் தரக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த பெற்றோர், கோவை ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் காமராஜ், தமது 2 மகள்களை ஈஷா யோகா மையத்தில் இருந்து மீட்டுத் தர வேண்டும் என்று அண்மையில் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஈஷா யோகா மையம் அடுத்தடுத்து புகார்கள் கிளம்பின.
இந்த புகார்களுக்கு ஈஷா யோகா மையம் தொடர்ந்தும் விளக்கம் அளித்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாரியப்பன், தமது மகனை ஈஷா யோகா மையத்திலிருந்து மீட்டுத் தரக் கோரி புகார் அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு நாள் முகாம் இன்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாரியப்பன், அவரது மனைவி தமிழ்ச் செல்வி தம்பதி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், தங்களது மகன் பாலகுருவை 6 ஆண்டுகளாக கோவை ஈஷா யோகா மையத்தில் தங்க வைத்திருப்பதாகவும், அங்கிருந்து மகனை மீட்டுத் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இதனிடையே, ஈஷா யோகா மையத்தின் மீது அவதூறு புகார்களை பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈஷா தியானலிங்க பக்தர்கள் சார்பாகவும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது.