சசிகலாவின் சம்பந்தி என்பதற்காக சிவாஜி மணிமண்டபத் திறப்பு விழாவை புறக்கணிக்கிறாரா முதல்வர்?
சசிகலாவின் சம்பந்தி என்பதற்காக சிவாஜி கணேசனின் மணி மண்டபத் திறப்பு விழாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புறக்கணிக்கிறார் என்று பரவலாக பேசப்படுகிறது.
சென்னை: சசிகலாவின் சம்பந்தி என்பதற்காகவே சிவாஜி கணேசனின் மணி மண்டபத் திறப்பு விழாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புறக்கணிப்பதாக மேலும் ஒரு காரணம் கூறப்படுகிறது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று அறிவித்த அவர் அதற்கான இடத்தையும் ஒதுக்கித் தந்தார். இந்நிலையில் அந்த பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது.
5 மாதங்களுக்கு பிறகு, கடந்த மே மாதம் முடிவடைந்தது. பணிகள் முடிவடைந்தும் இத்தனை மாதங்களாக மணி மண்டபம் திறக்கப்படாமல் இருந்தது.
திறப்பு விழா எப்போது?
இந்நிலையில் சிவாஜி கணேசனின் மணி மண்டபம் அக்டோபர் 1-ஆம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் கூறியிருந்தார். ஆனால் அந்த விழாவில் முதல்வரும் துணை முதல்வரும் பங்கேற்காமல் அமைச்சர்கள் பங்கேற்பர் என்று தெரிவித்திருந்தார்.
குடும்பத்தினரும் அதிருப்தி
மெரினாவில் இருந்த சிவாஜி சிலை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் அகற்றப்பட்டது ரசிகர்களையும், குடும்பத்தினரையும் வேதனையில் ஆழத்தியது. இந்நிலையில் திறப்பு விழாவில் முதல்வரும், துணை முதல்வரும் பங்கேற்காதது அவர்களுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஓபிஎஸ் பங்கேற்பு
கடும் எதிர்ப்பு கிளம்பி வந்த நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மட்டும் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா இருந்திருந்தால் திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டிருந்திருக்கும் நிலையில் எடப்பாடி கலந்து கொள்ளாதது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
பழைய வரலாறு
மெரினாவில் காமராஜர் சாலையில் சிவாஜியின் சிலையை திறந்து வைத்த கருணாநிதியால் அதன்பிறகு ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்த ராசி தமக்கும் ஆகிவிடுமோ என்ற பயத்தின் காரணமாக எடப்பாடி யோசிக்கிறார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். அதேவேளையில் மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது.
சிவாஜியின் பேத்தி
சிவாஜி கணேசனின் மகள் சாந்தி. இவரது மகள் சத்யவதியை சசிகலாவின் அக்கா வனிதாமணியின், மூன்றாவது மகன் சுதாகரன் கடந்த 1995-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சுதாகரனை ஜெயலலிதா வளர்ப்பு மகனாக பிரகடனப்படுத்திய பிறகுஇத் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் ஏராளமான தங்க நகைகளை அணிந்திருந்தது சர்ச்சையை கிளப்பியது. ஒரு வகையில் சசிகலாவுக்கு சிவாஜி கணேசன் சம்பந்தி முறையாகிறது. இதனால் சிவாஜியின் சிலையை திறந்து வைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யோசிக்கிறாரா என்று கேள்வி அனைவர் மனதிலும் ஏற்பட்டுள்ளது.