மதுரை நரபலி: டெய்லி ஒரு எலும்புக் கூடு சிக்குகிறது.. இன்று 8வது எலும்புக் கூடு தோண்டி எடுப்பு
மதுரை: மதுரையில் பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனத்தினர் நரபலி கொடுத்ததாக கூறப்படும் இடத்திலிருந்து இன்று மேலும் ஒரு எலும்புக் கூடு சிக்கியது.
பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனத்தினர் தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு புதிய முயற்சிக்கு முன்பும் அப்பாவிகளை பிடித்து வந்து நரபலி கொடுப்பார்கள் என்று அவர்களது நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்தவரான சேவற்கொடியான் புகார் கூறியிருந்தார். இதையடுத்து அவர் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டுதல் வேட்டை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் உத்தரவிட்டார்.
அதன்படி மேலூர் அருகே உள்ள மலம்பட்டி என்ற இடத்தில் சேவற்கொடியான் அடையாளம் காட்டிய இடத்தில் சகாயம் முன்னிலையில் அதிகாரிகள் தோண்ட ஆரம்பித்தனர். முதலில் ஒரு நாள் மட்டும் தோண்டுதல் வேட்டை நடந்தது. அன்று 6 உடல்களின் எலும்புக் கூடுகள் சிக்கின.
இதையடுத்து அந்த இடத்தில் மேலும் 10 அடி வரை தோண்டுமாறு சகாயம் உத்தரவிட்டார். இதையடுத்து அந்தப் பணி நடந்து வருகிறது. இதில் மேலும் ஒரு எலும்புக் கூடு நேற்று சிக்கியது. இந்த நிலையில் இன்று இன்னொரு எலும்புக் கூடு சிக்கியது.
கிடைத்த எலும்புக் கூடுகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.