பழனியில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலி... மக்களிடையே அதிகரிக்கும் பீதி
பழனியைச் சேர்ந்த முகமது என்பவர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று மரணம் அடைந்தார்.
கோவை: கோவை மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பழனியைச் சேர்ந்த முகமது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பழனியைச் சேர்ந்தவர் முகமது ஹனிபா. 47 வயதான இவருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து சில நாட்களாக அதிகமாக இருந்துள்ளது. இதனால் அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதே போல், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ஹாஜீரா பீவி என்பவர் சிகிச்சைப் பலனின்றி 2 நாட்களுக்கு உயிரிழந்தார். இப்படி தொடர்ந்து பன்றிக் காய்ச்சலுக்கு பலர் பலியாகி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சளி, காய்ச்ச்ல் போன்ற தொந்தரவு தொடர்ந்து இருக்குமானால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி அரசு சார்ப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. என்றாலும், காய்ச்சல் பரவுவதை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.