வேகமாய் பரவுகிறது பன்றிக் காய்ச்சல்.. திருவண்ணாமலையில் நகராட்சி பெண் ஊழியர் பலி.. மக்கள் பீதி
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாய் பரவி வருகிறது. இந்நோய்க்கு திருவண்ணாமலையைச் சேர்ந்த நகராட்சி பெண் ஊழியர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நகராட்சி பெண் ஊழியர் ஒருவர் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தார். பன்றிக் காய்ச்சலுக்கு அடுத்து உயிர் பலியாகி வருவதைக் கண்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பிரேமலதா. இவருக்கு 10 நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்துள்ளது. கடும் அவதிக்கு உள்ளான பிரேமலதா திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரேமலதா உயிரிழந்தார். அவரின் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.
பரவும் பன்றிக் காய்ச்சல்
இதே போன்று கோவையில் உள்ள ஒரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டது. இந்தக் காய்ச்சாலால் அவதிப்பட்ட தாய், தந்தை இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களது மகன் மற்றும் மகளுக்கும் பன்றிக் காய்ச்சல் தொற்று உருவாகியுள்ளது. அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடரும் பலிகள்
கோவை மதுக்கரை அருகேயுள்ள மச்சகவுண்டன் பாளையத்தை சேர்ந்த தண்டபானியும் அவரது மனைவி மல்லிகாவும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல், அவர்கள் இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்னர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
அவதி
உயிரிழந்த இவர்களின் மகன் சந்தானகிருஷ்ணன் மற்றும் மகள் மரகதம் ஆகியோருக்கும் பன்றிக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அச்சம்
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் தற்போது பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எச்சரிக்கை
சளி அதிகமாக இருத்தல், மூச்சு விட சிரமப்படுதல், தொடர் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல சுகாதாரத் துறை கூறியுள்ளது. இருந்தாலும், பலர் உயிரிழந்து வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.