கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றிக் கொண்டு தமிழகம் வந்த ஜீப் - ஓட்டுனர் கைது
நெல்லை: கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு மீன், கோழி கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்து தமிழக எல்லையில் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது. இன்று கோழி, மீன் கழிவுகளை கொட்ட வந்த ஜீப்யை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரையும் கைது கைது செய்துள்ளனர்.
தமிழக கேரளா எல்லைப் பகுதியான செங்கோட்டை புளியரை வழியாக தினமும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் வருகின்றன. அடிக்கடி கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் காலியான சரக்கு வாகன ஓட்டுனர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு அம்மாநிலத்தில் இருந்து புழுக்கள் நெளியும் மீன்,கோழி உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை ஏற்றி வந்து தமிழகத்திற்குள் கொட்டி செல்லும் நிலை கடந்த சிலமாதங்களாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை கேரளா மாநிலம் கோட்டயத்தில் இருந்து புளியரை போலீஸ் வாகன சோதனை சாவடியை கடந்து ஒரு ஜீப் வேகமாக வந்தது. போக்குவரத்து துறை சோதனை சாவடி அருகே வந்த போது அந்த வாகனத்தில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனைப் கண்ட வாகன போக்குவரத்து துறை அதிகாரி சண்முகம், புளியரை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ஜெயசங்கர், ராஜதுரை ஆகியோர் உடனடியாக அந்த வாகனத்தை சோதனை செய்தனர். இதில் மீன் கழிவுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை ஓட்டிவந்த தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கி மகன் முருகன் (24) என்பவரை கைது செய்து வாகனத்தின் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
அந்த வாகனம் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளதால் துர்நாற்றம் காரணமாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கழிவுகளை தமிழகத்தில் உள்ள புரோக்கர்கள் கணிசமான பணத்தை வாங்கிக் கொண்டு வாகனம் மூலம் கொண்டுவரப்படுவதாகவும் தமிழக கேரளா எல்லைப் பகுதி ஆரம்பிக்கும் இடமான கோட்டைவாசல் பகுதியில் காவல்துறை சோதனை சாவடி அமைத்தால் மட்டுமே இதுபோன்ற கழிவுகளை மட்டுமல்ல எந்த தடை செய்யப்பட்ட பொருள்களையும் தமிழகத்திற்குள் வரவிடாமல் தடுக்கவும்,மக்களை பாதுகாக்கவும் முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.