வீட்டு மாடியில் வெடி தயாரித்த போது விபத்து.. ஒருவர் உடல் சிதறி பலி.. 2 பேர் படுகாயம்
நாமக்கல் அருகே வீட்டின் மாடியில் நாட்டு வெடி தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார்.
நாமக்கல்: கோவில் திருவிழாவுக்காக வீட்டு மாடியில் வெடி தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் தூசூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் பாலுசாமி. 60 வயதான இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டு வெடிகளை தயாரித்து கோவில் திருவிழாக்களில் வெடித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது கோவில் திருவிழாக்கள் துவங்கி உள்ளதால் நாட்டு வெடிகளை அதிகளவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. பாலுசாமி வசிக்கும் 2 அடுக்கு மாடி வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் வெடிகளை அனுமதியின்றி உயர்வேதி பொருட்களை கொண்டு தயாரிக்கும் பணியில் இன்று ஈடுபட்டுள்ளார்.
அப்போது தயாரித்த வெடிகளை மாடி வீட்டின் வெளிப்புறத்தில் சூரிய ஒளியில் காய வைத்துள்ளார். இன்று மாலை திடீரென மழை வந்துள்ளது. இதனை கண்ட பாலுசாமி வெடிகளை அவசர அவசரமாக சாக்கு மூட்டையில் அள்ளி அறையில் வைத்துள்ளார்.
அப்போது எதிர்பாரத விதமாக வெடிகள் ஒன்றோடு ஒன்று உரசியதில் தீப்பற்றி பயங்கர சதத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் நாட்டு வெடிகள் வெடித்ததில் பாலுசாமி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த வெடி விபத்தில் அருகில் இருந்த 4-ம் மேற்பட்ட வீடுகளின் கூரை மற்றும் ஓடுகள் சேதமடைந்தன. இச்சம்பவத்தின் போது பாலுசாமியை காப்பாற்ற முயன்ற பேரன் ஜெயசந்திரன் உள்ளிட்ட இருவருக்கு இலேசான காயம் ஏற்பட்டது.
காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வருவாய் துறையினர் வெடி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.