கடையநல்லூர் அருகே பைக்-ஆட்டோ மோதி திமுக நகர செயலாளர் மகன் பலி! பைக் ரேஸ் காரணமா?
கடையநல்லூர் அருகே பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கடையநல்லூர்: கடையநல்லூர் அருகே பைக் ரேஸ் நடத்தியபோது, எதிரே வந்த ஆட்டோ மோதி திமுக நகர செயலாளர் மகன் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
கலந்தர்மஸ்தான் தெருவை சேர்ந்த திமுக நகரசெயலாளர் சேக் உதுமான் சேகனா, முன்னாள் நகராட்சி தலைவி சைபுநிஷா சேகனா தம்பதி. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். மகன் முகம்மது ஷகீல் 15, நேற்று மாலை சேந்தமரம் அருகே நோன்பு திறந்துவிட்டு, தனது நண்பர் நண்பர் ஹுஸைபா 14 மற்றும் மற்றொரு நண்பரை அழைத்துக் கொண்டு 3 பேராக ஒரே பைக்கில் பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் வேறு 2 பைக்கில் 6 நண்பர்களும் வந்தனர்.
அப்போது, மாவடிக்காலை சேர்ந்த அய்யனார் என்பவர் தனது சொந்த ஆட்டோவில் மனைவி, குழந்தைகளுடன் சேந்தமரம் நோக்கி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே வந்த பைக் மீது ஆட்டோ பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ அருகே உள்ள பாப்பான் கால்வாயில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பைக்கில் வந்த முகம்மது ஷகீல் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பைக்கின் பின்னால் இருந்த ஹூஸைபா மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த ஆட்டோக்காரர் மனைவி ராதா 36, இருவரும் பலத்த காயமடைந்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த அவர்களை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கடையநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, 9 நபர்கள் 3 பைக்கில் சேந்தமரம் ரோட்டில் பைக் ரேசில் ஈடுபட்டு வந்ததால்தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தொடர் விசாரணையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.