சினிமா டிக்கெட் விலை கிடுகிடு உயர்வின் பின்னணி இதுதான்!
சினிமா கட்டணம் மேலும் 25 சதவீதம் அதிகரித்துள்ளது மக்களுக்கு கூடுதல் சுமையைத்தான் தந்துள்ளது.
சென்னை : மக்கள் நலன் கருதி 25 சதவீதம் கட்டண உயர்வு என்று சொல்லும் தமிழக அரசு இரண்டு வரியை விலையில் புகுத்துவதால் தான் சினிமா கட்டணம் மேலும் உயர்வைக் காண உள்ளது என்று மக்கள் கருதுகின்றனர்.
ஜிஎஸ்டி என்பதே நாடு முழுவதும் ஒரே வரி முறை என்று பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் கீழ் சினிமாத் துறையும் வருவதாக மத்திய அரசு அறிவித்தது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு டிக்கெட் கட்டணங்கள் ரூ. 100 கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு 28 சதவீத வரியும், ரூ. 100க்கு குறைவாக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு 18 சதவீத வரியும் கொண்டு வரப்பட்டது.
இதனால் டிக்கெட் கட்டணத்தோடு பழைய வரி கழித்தல் இல்லாமல் அப்படியே ரூ. 120 டிக்கெட் கட்டணம் + ஜிஎஸ்டி என்று மறைமுக கட்டண கொள்ளையை தியேட்டர்கள் அரங்கேற்றின. இதனால் டிக்கெட் கட்டணம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 45 சதவீதம் அளவிற்கு உயர்வு கண்டன.
மாநில அரசு வரி
இந்நிலையில் தமிழக அரசு செப்டம்பர் மாதம் தேதி முதல் டிக்கெட் கட்டணங்களுக்கு 10 சதவீதம் உள்ளூர் வரி விதித்துள்ளது. உள்ளூர் வரி விதிப்பால் தாங்கள் ஏற்கெனவே வசூலிக்கும் கட்டணத்திலிருந்து 10 சதவீதத்தை தியேட்டர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டும்.
கட்டணத்தை உயர்த்திய அரசு
ஆனால் தங்களால் தியேட்டர்களை இயக்க முடியாததால் அக்டோபர் 6 முதல் புதுப்பட ரிலீஸ் இல்லை என்று போர்க்கொடி பிடித்தனர் திரையரங்க உரிமையாளர்கள். இதனால் உள்ளூர் வரி அறிவித்த கையோடு டிக்கெட் கட்டணத்தையும் 25 சதவீதம் உயர்த்தி மக்களுக்கு நெருக்கடியைத் தருகிறது அரசு.
இத்தனை வரியா?
ஆக ஒரு நபர் சினிமா பார்க்கச் சென்றால் எத்தனை வரி செலுத்த வேண்டும் தெரியுமா. டிக்கெட் விலையுடன் சேர்த்து மாநில அரசுக்கு உள்ளூர் வரியாக 10 சதவீதம், மத்திய மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி வரியாக 28 முதல் 18 சதவீதம் என்று 2 விதமான வரியை கட்ட வேண்டும்.
சினிமா பார்க்க வேண்டுமா?
திரைத்துறையினர், கட்டணத்தை உயர்த்திக் கொண்டே போவதற்கு அனுமதிப்பதுதான் மக்கள் மீது அக்கறையுடன் செயல்படும் அரசா என்ற கேள்வி மக்களிடம் எழுகிறது. நெருக்கடி கொடுக்கும் அறிவிப்புகளால் அப்படி சினிமாவை தியேட்டரில் போய் பார்க்கத் தான் வேண்டுமா என்ற மன ஓட்டம் தான் அனைவர் மனதிலும் மேலோங்குகிறது என்பது சமூக வலைத்தளங்களில் மக்கள் வெளியிடும் கருத்துக்களை வைத்து பார்க்கும்போது புரிகிறது.