அரசு கோட்டாவில் படித்து மாதம் ரூ.80000 சம்பாதிக்கிறேன்.. நீட் தேவையில்லை: ஒன்இந்தியாவாசகர் உருக்கம்!
சென்னை: மாணவி, அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் நீட் குறித்த விவாதம் சூடுபிடித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு நமது வாசகர்களை கேட்டுக்கொண்டோம்.
நமது வாசகர் ரெங்கநாதன் இ-மெயில் மூலம் பகிர்ந்துள்ள தகவல்: அனிதா ஆன்மா சாந்தியடையட்டும். மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் மிகவும் கடுமையாக நடந்துகொண்டன. காரணம், வலுவான எதிர்க்கட்சி இல்லாதது. சிபிஎஸ்இ மற்றும் மாநில பாடத்திட்டங்கள் ஒரே மாதிரியான தரத்திலானவை கிடையாது. எல்லா மாநிலங்களிலும் கிராமமோ, நகரமோ ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்தவர்களும் அவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்குரிய கல்வியை பெற வேண்டும்.
என்னதான் தேர்வு முறை மாறினாலும் கூட எல்லா மாநிலங்களுக்கும் பொதுவான நுழைவு தேர்வாக நீட் என்பதை கொண்டுவர முடியாது. அனிதா ஏழ்மை குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, மாநில பாடத் திட்டத்தில் இவ்வளவு அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதன் மூலம் நான் கூற விரும்புவது நீட் இந்தியாவில் இருந்து அகற்றப்பட வேண்டும்.
நான் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். நான் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தபோதிலும், கோவை கருணை இன்ட்டிடியூட்டில் பிஇ படிக்க முடிந்தது. ஆனால் இப்போது நான் மாதம் ரூ.80000 சம்பாதிக்கிறேன்.
1997ல் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு, 15 சதவீத கோட்டாவை அனைத்து கல்லூரிகளிலும் வழங்க உத்தரவிட்டது.
பி.இ சீட் எனக்கு இலவசமாகவே கிடைத்தது. இதுதான் என்போன்ற மாணவர்கள் இன்ஜினியரிங் படிக்க காரணமாக இருந்தது. எனது சொந்த அனுபவத்தை ஏன் கூறுகிறேன் என்றால், நானும் கிராமத்திலிருந்தும், ஏழை குடும்பத்திலிருந்தும் வந்த ஒருவர்தான். எனக்கு அந்த வலி தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.