கூவத்தூர் பேரம்... 2சி+3சிX123... 50X10 எல். அன்றே அம்பலப்படுத்தியது ஒன் இந்தியா தமிழ் #MLAsForSale
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்ட போது பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதை தற்போது அதிமுக எம்.எல்.ஏ சரவணன் அம்பலப்படுத்தியுள்ளார். கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் சிறைவைக்கப்பட்ட போதே இந்த பேர விவகாரத்தை அம்பலப்படுத்தியது நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம்.
தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பிப்ரவரி 18-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அதற்கு முதல்நாள் நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் "நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல 2சி+3சிX123; 50x10எல் பகீர் தகவல்கள்" என அம்பலப்படுத்தியிருந்தோம்
அத்துடன் மாதந்தோறும் எம்.எல்.ஏக்களுக்கு ரூ10 லட்சம் ரொக்கமாக கிடைக்கவும் ஏற்பாடு செய்வதாகவும் சசிகலா தரப்பு பேரம் பேசியதையும் நாம் பதிவு செய்திருந்தோம்.
தற்போது நமது செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் டைம்ஸ் நவ்- மூன் டிவியின் ஸ்டிங் ஆபரேஷனில் மதுரை அதிமுக எம்.எல்.ஏ. சரவணன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதில் விமான நிலையத்தில் இருந்து பேருந்தில் ஏறும் போது ஒரு பேரம், கூவத்தூரில் ஒரு பேரம் என எல்லாவற்றையும் அம்பலப்படுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் பணத்தை வாங்க விரும்பாத எம்.எல்.ஏக்களுக்கு தங்கம் கொடுப்பதாகவும் சசிகலா தரப்பு பேசியது எனவும் உண்மையை போட்டு உடைத்திருக்கிறார் சரவணன். அவரைத் தொடர்ந்து எம்.எல்.ஏ கனகராஜூம் எம்.எல்.ஏக்களுக்கு தங்கமும் பணம் கொடுக்கப்பட்டது என கூறியுள்ளார்.
இவை அனைத்தையுமே கூவத்தூர் கூத்துகள் நடந்தேறிய காலத்திலேயே நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் அம்பலப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.