இப்போது தேர்தல் நடந்தால் திமுகவே வெல்லும்.. அதிமுகவுக்கு 3வது இடம்தான்: ஒன்இந்தியா தமிழ் போல்!
இப்போது உடனடியாக தமிழகத்திற்கு பொதுத்தேர்தல் நடந்தால் திமுகவே வெல்லும் என்று 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.
சென்னை: இந்த சூழ்நிலையில் தேர்தல் நடந்தால் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பது 'ஒன்இந்தியா தமிழ்' வெப்சைட் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மக்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு பெற்றவர். அவர் கடந்த 5ம் தேதி மறைந்துவிட்ட நிலையில், அதிமுகவுக்கு அதே அளவுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளதா என்பதை அறிந்து கொள்ள 'ஒன்இந்தியா தமிழ்' வெப்சைட்டில் கருத்துக் கணிப்பு நடத்தினோம்.
இந்த நிலையில் தேர்தல் நடந்தால் உங்கள் ஆதரவு யாருக்கு என்று கேள்வி முன் வைக்கப்பட்டது. இதற்காக முன்னணி கட்சிகளின் பெயர்களும் ஆப்ஷனாக கொடுக்கப்பட்டது.
திமுகவுக்கு முதலிடம்
இதில் அதிமுகவுக்குதான் என்று, 16.67% வாசகர்கள் வாக்களித்துள்ளனர். திமுகவுக்கே என 36.95% வாசகர்களும், மக்கள் நல கூட்டணி இருக்கே என்பதற்கு, 2.51% வாசகர்களும் வாக்களித்துள்ளனர்.
பாமக அபாரம்
பாஜகதான் என் சாய்ஸ் என, 8.93% வாசகர்கள் வாக்களித்துள்ளனர். பாமக இருக்க பயமேன் என்ற ஆப்ஷனுக்கு 22.8% வாசகர்கள் வாக்களித்துள்ளனர். நாம் தமிழர் நல்ல சாய்ஸ் என 7.24% வாசகர்களும், தேமுதிகவை மறக்கலை என 4.92% வாசகர்களும் வாக்களித்துள்ளனர்.
3வது இடமே அதிமுகவுக்கு
இதில் கவனிக்க வேண்டிய அம்சம், திமுக முதலிடத்தையும், 22.8 சதவீத வாசகர்கள் ஆதரவுடன் 2வது இடத்தை பாமகவும் பிடித்துள்ளது. ஆனால், ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாக 16.67 சதவீத வாசகர்களே வாக்களித்துள்ளனர்.
அம்மா இல்லைன்னா சும்மா
ஜெயலலிதாவை தவிர்த்துவிட்டு அதிமுகவை பார்த்தால் அதற்கு மதிப்பில்லை என வாசகர்கள் கணிசமாக நினைத்திருப்பது இதன் மூலம் தெரியவருகிறது. அதிமுகவிற்குள் பொதுச்செயலாளர் பதவிக்கு குழப்பம் ஏற்பட்டால் இந்த வெறுப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படலாம்.