நீட் தேர்வை எழுதாமல் மொத்தமாக புறக்கணிக்க வேண்டும்: ஓன்இந்தியா வாசகர்கள்!
சென்னை: மாணவி அனிதா போல நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ள பல மாணவ, மாணவிகள் நலன்காக்க உங்கள் யோசனையை கூறுங்கள் என 'ஒன்இந்தியாதமிழ்' தனது வாசகர்களிடம் கேட்டிருந்தது.
உடனடியாக இமெயில் மூலம் தங்களது கருத்துக்களையும், கண்டனங்களையும் பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டனர் நமது வாசகர்கள். இந்தியா மட்டுமல்லாது, சிங்கப்பூர், இலங்கை, கென்யா, இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இருந்தும் நமது வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தபடி உள்ளனர்.
அதில் முதல்கட்டமாக சில வாசகர்களின் கருத்துக்களை நீங்களே பாருங்கள்:
முகேஷ்: நம் மாணவர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் நீட் வேண்டாம் என்பதற்கான காரணம் அவனது இயலாமை அல்ல. நம் கல்வி தரத்தின் இயலாமை. நாங்கள் நீட்டில் இருந்து நிரந்தர விலக்கு கேட்கவில்லை. இன்னும் சில ஆண்டுகளில் கல்வி தரத்தை உயர்த்தி அதன்பின் நீட் அனுமதியுங்கள். தமிழன் புற முதுகிட்டு ஓட கோழை அல்ல. எங்கள் மாணவர்களின் அறிவுக்கு தீனி போடும்படி கல்வி தரத்தை உயர்த்துங்கள் பின் இந்தியாவின் அனைத்து மருத்துவ இடங்களும் என் தமிழ் மாணவன் நிரப்பிய பிறகே மற்றவர்க்கான இடம்.
ராகிருஷ்ணன் சோமசுந்தரம்: நம் குழந்தைகளை எந்த ஒரு நிலையிலும் நம்பிக்கை இழக்காதவாறு நாம் அவர்களை வளர்க வேண்டும். படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். பெற்றோர்களும் அதை உணர்ந்து அவர்களிடம் எந்த திணிப்பையும் காட்டக்கூடாது. தோல்வி என்னும் கடலை நீந்த அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
வெங்கடேஷ்: நீட் தேர்வை எழுதாமல் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் நமது நிலைப்பாட்டை அரசு உணரும். தேர்வையும் எழுதிவிட்டு கோரிக்கைவிடுத்தால், அதை பரிசீலிக்க மாட்டார்கள்.
ராம்குமார்: தமிழகத்தில் மருத்துவ படிப்பை முழுவதும் தமிழில் மாற்றம் செய்தல் வேண்டும் , அதனால் தமிழ் , மருத்துவம் இரண்டும் நம்மை விட்டு செல்லாது.
அகமது யாசீன்: வாசகர்கள் கருத்துக்களை கேட்டதற்கு நன்றி. தமிழக அரசில் மத்திய அரசு தலையிடுவது, நெருக்கடி தருவதை தடுக்க வேண்டும். எல்லோருக்குமே நீட் நடைமுறையை நீக்க வேண்டும். இளமை கொண்ட, ஊக்கமிக்க அரசியல்வாதிகள் அரசை வழிநடத்த தேவை.
சுரேஷ்குமார்: இன்று நாம் ஒரு டாக்டரை (செல்வி.அனிதா) இழந்துள்ளோம். அவர் என்ன தவறு செய்தார்? தமிழக அரசியல்வாதிகளின் திறமைகுறைவால் அனிதாவை இழந்துள்ளோம். எப்போதுமே நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு தேவை இல்லை.
சுகுமார்: நமக்கு தேவை இன்னுமொரு மெரினா புரட்சி.
நிரந்தரன்: பதவிக்காக அணி தாவும் ஆட்சியாளர்களுக்கு,அனிதாக்கள் பற்றி என்ன கவலை?
இவ்வாறு வாசகர்கள் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்தபடி உள்ளனர்.