காவிரி டெல்டாவில் இருந்து உடனடியாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும்: வைகோ
காவிரி டெல்டா பகுதிகளில் இருந்து உடனடியாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : காவிரி டெல்டா பகுதியில் இருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனைத்து திட்டங்களையும் கைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.
மேலும், காவிரி டெல்டா பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து அனைத்து திட்டங்களையும் கைவிட்டு ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வேளாண் சிறப்பு மண்டலம்
டெல்டா மாவட்டங்களை வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் ஒரு கிணறுக்கு கூட ஓ.என்.ஜி.சி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து அனுமதி பெறவில்லை என்பதை குறிப்பிட்ட வைகோ, விரைவில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை விட்டு ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பச்சை துரோகம் செய்த அரசு
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் அதை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றுவதற்கான பணிகளைச் செய்யவில்லை. காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழகத்துக்கு பச்சை துரோகத்தை மோடி அரசு செய்துள்ளது. காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக தமிழக அனைத்து கட்சி தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக தேர்தல்
தொடர்ந்து தமிழகத்தை அனைத்து விதங்களிலும் மத்திய அரசு புறக்கணிப்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுத்துள்ள முடிவின்படி, பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் தமிழக முதல்வருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்து மோடி செயல்பட்டு வருவது சரியல்ல என்று வைகோ குறிப்பிட்டார்.
அடுத்தகட்ட போராட்டம்
மதிமுகவின் பொதுக்குழு வருகிற 6ம் தேதி ஈரோட்டில் கூடுகிறது. உயர்நிலை குழு கூட்டமும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் கூடுகிறது. அதில் பிரதமர் மோடி தமிழகத்தை தொடர்ந்து உதாசீனப்படுத்துவது குறித்தும், அதற்கான அடுத்தகட்ட போராட்டம் குறித்தும் கலந்தாலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று வைகொ தெரிவித்துள்ளார்.