நாகை முதல் ராமநாதபுரம் வரை 110 எண்ணெய் கிணறுகள் அமையும் இடங்கள் அவைதான்!
டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்களுக்கு நடுவே எண்ணெய் கிணறுகள் அமைக்க போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மேலும் 110 இடங்களில் துரப்பனக் கிணறு அமைக்க திட்டமிட்டுள்ளது.
சென்னை: விவசாய நிலங்களை அழித்து ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பொதுமக்களும் போராடி வரும் நிலையில் மேலும் 110 இடங்களில் எண்ணெய் துரப்பன கிணறுகள் அமைக்க மத்திய அரசின் அனுமதிக்காக ஓஎன்ஜிசி காத்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே கிணறு தோண்டி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுத்து அதைக் குழாய் மூலம் தலைமைக் கிடங்கிற்கு கொண்டு சென்று, அங்கு சுத்திகரித்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் என தனித்தனியே பிரித்து நாடு முழுவதும் அனுப்பப்பும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே, இவ்வாறு எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணியில் பல்வேறு எதிர்ப்புகளை ஓஎன்ஜிசி என்று சொல்லப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சந்தித்து வருகிறது.
ஏனெனில் நிலத்திற்கு அடியில் இருக்கும் வளங்கள் தோண்டி எடுக்கப்படுவதால் மண் வளம் கெடுவதோடு, எண்ணெய் குழாயில் இருந்து வெளியாகும் கசிவுகள் நிலத்தை நஞ்சாக்குவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் எனவும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
110 புதிய கிணறுகள்
இந்நிலையில் காவிரிப் படுகையில் மேலும் 110 இடங்களில் துரப்பனக் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி திட்டமிட்டுள்ளது. இதற்காக நரிமணம், குத்தாலம் ஆகிய ஊர்களில் உள்ளது போன்று, மத்திய சேமிப்புக் கிடங்கு அமைக்க நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மாதானம் என்ற இடத்தில் 20 ஏக்கர் நிலத்தை ஓஎன்ஜிசி கண்டறிந்துள்ளது. இங்கு 20 கிணறுகள் தோண்டப்பட திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும்
இதே போன்று காளியில் 5 கிணறுகளும், குத்தாலத்தில் 10, நரிமணத்தில் 10, அடியக்கமங்கலத்தில் 5, கீழ்வேளூரில் 3, நன்னிலத்தில் 5, ஆதிச்சபுரத்தில் 4, வடக்குகோவில்களப்பாலில் 10, மாத்தூரில் 3, பந்தநல்லூரில் 10 மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கஞ்சிரங்குடியில் 10, பெருங்குளம் பெரியபட்டினத்தில் 10, பாக் ஜலசந்தியின் மேல்மட்டத்தில் 5 கிணறுகள் தோண்ட மத்திய அரசின் எரிசக்தித்துறை திட்டமிட்டுள்ளது.
ரூ.50 ஆயிரம் கோடி செலவில் அமைப்பு
எண்ணெய்த் துரப்பனப் பணிகள் காவிரிப்படுகையில் கடந்த 1985ஆம் ஆண்டும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1994-ஆம் ஆண்டும் தொடங்கின. தற்போது மேலும், 110 இடங்களில் கிணறுகள் தோண்ட திட்டமிட்டுள்ளது. ஒரு கிணறுக்கு இரண்டு ஹெக்டேர் நிலம் தேவை என்ற அடிப்படையில் 75 நாட்களில் இவை தோண்டுவதற்கு அவகாசம் தேவை. இதனிடையே, புதிய கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு கிணறுகளை அமைக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் ரூ. 50 ஆயிரம் கோடி முதலீடு செய்யப் போவதாக ஓஎன்ஜிசி அறிவித்துள்ளது.
அனுமதிக்கு பரிந்துரை
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும், நாகை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது புதிதாக 110 கிணறுகளைத் தோண்ட ஓஎன்ஜிசி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை தயாரித்துள்ள ஓஎன்ஜிசி, அதை அடுத்தக் கட்டமாக மத்திய சுற்றுச்சூழல்துறையின் அனுமதிக்காக அனுப்பியுள்ளது.
விவசாயிகள் அதிர்ச்சி
தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த டெல்டா மாவட்டம் ஏற்கனவே வறட்சியால் கடுமையாக நொந்து போயுள்ளது. முப்போகம் விளைந்த நிலங்களில் சம்பா, குறுவை என்று இரண்டு சாகுபடியும் நீரின்றி பொய்த்துப் போன விரக்தியில் விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில் வெந்தப் புண்ணில் விரலைப் பாய்ச்சுவது போல காவிரி டெல்டாவில் 110 இடங்களில் எண்ணெய் துரப்பனக் கிணறுகளைத் தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.