திருவாரூர்: ஓஎன்ஜிசி குழாய் உடைந்து வயலில் தேங்கிய கச்சா எண்ணெய் - விவசாயி அதிர்ச்சி
திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அதில் இருந்து வெளியேறும் கச்சா எண்ணெய் வயல்களில் தேங்கியுள்ளது.
Recommended Video
திருவாரூர்: ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வயலிலும், ஆற்றிலும் கச்சா எண்ணெய் தேங்குவது விவசாயிகளிடையேயும் திருவாரூர் மாவட்ட மக்களிடையேயேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அருகே கமலாபுரம் என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளத. ஒரு ஏக்கர் வயலில் சுமார் சுமார் 3 அடி உயரத்துக்கு கச்சா எண்ணெய் தேங்கியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், கொரடாச்சேரி, குடவாசல்,கோட்டூர் ஒன்றிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான இடங்களில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் பணியை ஓஎன்ஜிசி நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிலையில் எண்ணெய் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறி வருகிறது.
தனசேகரன் என்ற விவசாயிக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலம் எருகாட்டூர்-வடகுடி சாலையில் உள்ளது. அவரது விவசாய நிலத்தின் அடியில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் கச்சா எண்ணெய் எடுத்து செல்லும் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டதால் குழாயில் இருந்து எண்ணெய் கொப்பளித்து வெளியேறி வயலில் குளம் போல தேங்கியுள்ளது.
இதன் காரணமாக, அந்த 5 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் விவசாய நிலம் கச்சா எண்ணெய் படர்ந்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்துவிட்ட காரணத்தால் சம்பா பயிர்களுக்கு பாதிப்பு ஏதுமில்லை என தனசேகரன் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் தேங்கிய வயலில் இனி விவசாயம் செய்ய முடியுமா என்று கவலையுடன் கூறியுள்ளார் விவசாயி தனசேகரன்.
திருவாரூர் பகுதியில் இவ்வாறு கச்சா எண்ணெய் கசிந்து விளைநிலங்களை சேதப்படுத்துவது இது முதல்முறையல்ல. அடிக்கடி நிகழும் இந்த கசிவுகள் குறித்து பலமுறை புகார் அளித்தும் மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகள் எடுக்காமல் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எண்ணெய் கசிவு குறித்து தகவலறிந்து வந்த ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்து உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் அருகே எருக்காட்டூரில் 7 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. அந்த எண்ணெய், குழாய்கள் மூலம் வெள்ளக்குடியில் உள்ள சேகரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக எருக்காட்டூரில் விளைநிலங்கள் வழியாகவும், பாண்டவை ஆற்றின் குறுக்காகவும் குழாய்கள் புதைக்கப்பட்டு வெள்ளக்குடிக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த குழாய்களில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு ஆற்று நீரில் கலந்து வருகிறது. இதுகுறித்து எருக்காட்டூர், காட்டாற்றுப் பாலம், கமலாபுரம் பகுதி மக்கள் கூறியபோது, இப்பகுதி விளைநிலங்களில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் இருந்து அவ்வப்போது கச்சா எண்ணெய் கசிந்து விளைநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இப்போது ஆற்று நீரிலும் கச்சா எண்ணெய் கலந்து வருகிறது. இந்த ஆற்று நீரையே பாசனத்துக்கு பயன்படுத்தி உள்ளோம் என்பதும், கால்நடைகளும் இந்த நீரையே குடித்து வந்துள்ளன என்பதும் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே எருகாட்டூர் மற்றும் கமலாபுரம் பகுதியில் ஓ.என்.ஜி.சி.யின் கச்சா எண்ணெய் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு பலநூறு ஏக்கர் விவசாய நிலங்களில் இன்னும் விவசாயம் செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது.
விவசாய நிலங்களில் குழாய்களை பதிப்பதால் தொடர்ந்து பல்வேறு விவசாய நிலங்கள் முழுவதுமாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டிவருகின்றனர். எனவே ஓ.என்.ஜி.சி நிறுவனம் குழாய் பதிக்கும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் எனவும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.