மயிலாடுதுறை அருகே ஓஎன்ஜிசி குழாய் 4-வது முறையாக உடைந்து எண்ணெய் கசிவு- பீதியில் பொதுமக்கள்!
மயிலாடுதுறையை அடுத்த குத்தாலம் அருகே ஓஎன்ஜிசி குழாய் 4-வது முறையாக உடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை குத்தாலம் அருகே ஓஎன்ஜிசி குழாய் 4-வது முறையாக உடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகள் உள்ளன. குத்தாலம் அருகே மாதிரிமங்கலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஓஎன்ஜிசி சார்பில் கச்சா எண்ணெய் குழாய் அமைக்கப்பட்டது.
தற்போது அப்பகுதியில் ஒரு வாய்க்கால் அருகே 3 அடி ஆழத்தில் உள்ள பைப்பில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் கசிந்து வெளியேறுகிறது.
இதை கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்து அப்பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். கதிராமங்கலத்தை போல இப்பகுதியிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வெளியூரிலிருந்து அப்பகுதிக்கு யாரையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. ஏற்கெனவே மாதிரிமங்கலத்தில் 3 முறை எண்ணெய் குழாய் உடைந்துள்ள நிலையில் இது 4-ஆவது முறையாகும். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.