விளைச்சல் இல்லாததால் எகிறிய சின்ன வெங்காயம் விலை..!
வரத்து குறைந்ததால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை அதிரடியாக அதிகரித்துவிட்டது.
நெல்லை: வரத்து குறைவால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. இதனால் வெங்காயத்தை வாங்கி விற்க முடியவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கீழப்பாவூர், மேலப்பாவூர், தென்காசி, வடகரை, அச்சன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மார்ச், ஏப்ரல் மாதத்தில் கத்தரி, வெண்டைக்காய், மிளகாய், தக்காளி, பல்லாரி, சின்ன வெங்காயம், சீனி அவரைக்காய், அவரைக்காய், பூசணிக்காய், தடியங்காய் உள்ளிட்டவை பயிர் செய்யப்படுவது வழக்கம். பயிர் செய்யப்பட்ட காய்கறிகளை ஜூன், ஜூலை மாதத்தில் அறுவடை செய்து பாவூர்சத்திரம் மா்க்கெட்டுக்கு கொண்டு வருவர்.
ஆனால் இது கடந்த 2015 வரை மட்டுமே நீடித்தது. அதன் பிறகு பருவமழை சரியாக இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கிணறுகளில் தண்ணீர் குறைந்தது. இதனால் கீழப்பாவூர் ஒன்றியத்தில் 90 சதவீத நிலத்தை தரிசாக விட்டுள்ளனர்.
ஆனால் தேவைகள் அதிகமாக இருக்கும் நிலையில் சின்ன வெங்காயம் பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு குறைவாக இருப்பதாலும், கேரள வியாபாரிகள் வருகையாலும் சின்ன வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.70 விற்ற சின்ன வெங்காயம் தற்போது மார்க்கெட்டில் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது.
இது பருவமழை மேலும் தாமதம் ஆனால் மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகளும், பொது மக்களும் கவலை தெரிவிக்கின்றனர்.