விர்றுன்னு ஏறுது விலை.. அலறி அடித்து ஓட வைக்கும் வெங்காயம்.. கிலோ ரூ.200ஐ தொட்டு அதிரடி!
ரூ.200ஐ தொட்டது வெங்காய விலை
சென்னை: ஐயோ.. அம்மா.. ஆளை விடுங்க சாமி.. என்று கோயம்பேட்டில் மக்கள் தலைதெறிக்க ஓட ஆரம்பித்துள்ளனர்.. வெங்காயத்தின் விலை ரூ.200ஐ தொட்டுவிட்டதால், பொதுமக்கள் கடுப்பும் வெறுப்பும் கலந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
நாடு முழுவதும் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அதுவும் ஒவ்வொரு நாளுக்கும் கிலோ 10, 20 என படு வேகமாக அதிரடியாக உயர்ந்து வருகிறது.. வெங்காயம் விலையை குறைக்க அரசு பல இறக்குமதி சலுகைகளை அளித்தாலும், விலை என்னவோ நம்மை மிரட்டிதான் வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை வெங்காயத்தின் பயன்பாடு அதிகம்.. சட்னி முதல் சாம்பார் வரை வெங்காயம் இல்லாமல் நம்மவர்களால் சமைக்கவே முடியாது. அதனால் சாமான்யன் முதல் உயர்தர வர்க்க மக்கள் வரை இதன் பாதிப்பு இருக்கவும், பார்லிமென்ட் வரை வெங்காய விலை உயர்வு பிரச்சனை கொண்டு போகப்பட்டது. வழக்கமான வரத்து குறைந்து வரும் நிலையில், மழையின் மிரட்டலும் தொடங்கி உள்ளது, இதன் வரத்தை மேலும் குறைத்துள்ளது.
நாசிக்
மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில்தான் நாட்டிலேயே பெரிய வெங்காய சந்தை இருக்கிறது. இங்கிருந்துதான் பல பகுதிகளுக்கு வெங்காயம் அனுப்பப்படுகிறது. ஆனால், அந்த மாநிலத்தில் பெய்த மழை, தொடர்ந்து வந்த 2 புயல்களால் வெங்காய உற்பத்தி குறைந்தது.
கோயம்பேடு மார்கெட்
அதன் பாதிப்புதான் இப்போது கோயம்பேடு மார்க்கெட் வரை எதிரொலித்துள்ளது. வழக்கமாக வரும் லோடுகள் குறைந்துவிட்டன.. ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.80 முதல் ரூ.120 வரையும், சின்ன வெங்காயம் ரூ.100 முதல் 160 வரையும் விற்கப்பட்டது. இப்போது ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.200 ஐ நெருங்கி உள்ளது.
டன் வெங்காயம்
மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் வழக்கமான விளைச்சலில் 75 சதவிகிதம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுபோக, சென்னைக்கு ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் வெங்காயம் வருகிறது. வழக்கமாக 100 லாரிகளில் 20 டன் வெங்காயம் வந்தநிலையில், இப்போது வெறும் 35 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வந்து கொண்டிருக்கிறது.
வெங்காய பச்சடி
இப்படி ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய் என்றதும், இந்த விலையை கேட்டுவிட்டு, சில ஹோட்டல்களில் வெங்காயம் சேர்த்து சமைக்கப்படும் உணவு வகைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு விட்டதாம். அதிலும் வெங்காய பச்சடிகளுக்கு நோ"தான்..!
விலை குறையும்
குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அறுவடை முடிந்த பின்னரே புது வெங்காய வரத்து தொடங்கும் என்கிறார்கள்.. அது எப்படியும், டிசம்பா் 3-வது வாரத்திலேயே வரத்து வரத்தொடங்கிவிடும் என்பதால், படிப்படியாக வெங்காய விலை குறையும் என்று நம்பப்படுகிறது.
மக்கள் கலக்கம்
வெங்காய விலையால் மக்கள் படும் அவதியை சுருக்கமாக சொல்வதானால்.. சட்னி முதல் சாம்பார் வரை கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது என்றாலே புரியும். அந்த அளவுக்கு வெங்காய விலையால் மக்கள் கதி கலங்கிப் போயுள்ளனர்.