வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்! உரிக்காமலேயே கண்ணீர் விடும் இல்லத்தரசிகள்!!
சென்னை: பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 80 ரூபாயாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். வெங்காயம் என்ற பெயரைக்கேட்டாலே இனி கண்ணீர் வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் பெரிய வெங்காயம் முக்கியமான ஒன்றாகும். வெங்காயத்தை உரிக்கும்போது கண்களில் இருந்து கண்ணீர் வரும். ஆனால் தற்போது வெங்காயத்தின் விலையை கேட்டாலோ கண்களில் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது. கடந்த சிலதினங்களாக வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் வெங்காய விலை உயர்வால் முக்கிய நகரங்களில் எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரத்து குறைவு
சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெங்காய வரத்து குறைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மஹாராஷ்ட்ராவில் இருந்து வெங்காய வரத்து குறைந்து, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
90 ரூபாயாக உயர்வு
50 கிலோ மூட்டை 3 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விலையில் 60 ரூபாயை எட்டியுள்ள வெங்காயத்தின் விலை சில்லரை விற்பனையில் ஒரு கிலோ 80 ரூபாயிலிருந்து 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர். தொடர்ந்து வெங்காய வரத்து குறைந்து வருவதால் தட்டுப்பாடு அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
யோசிக்கும் மக்கள்
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் தற்போது பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் வெங்காயம் வாங்கிச்செல்லவே பொதுமக்கள் யோசிக்க வேண்டிய நிலை உள்ளது.
இல்லத்தரசிகள் கவலை
ஈரோட்டிற்கு பெரிய வெங்காயம் கர்நாடக மாநிலம் பெங்களூர், மராட்டிய மாநிலம் புனே, தமிழ்நாட்டில் பல்லடம் போன்ற இடங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நேற்று ஒரு கிலோ பெரிய வெங்காயம் ஈரோட்டில் ரூ.80க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
கையிருப்பு இருக்கிறது
வெங்காய விலை உயர்வு குறித்து சட்டசபையில் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் வைத்திலிங்கம், தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் வெங்காய சாகுபடி பரப்பு அதிகரித்திருப்பதால், தேவையை ஈடுகட்டும் அளவுக்கு கையிருப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
பணவீக்கத்தை கட்டுபடுத்துவதாக கூறிய மத்திய அரசும், சாதாரண மக்களுக்கான அரசாக கூறிக்கொள்ளும் டெல்லி ஆம் ஆத்மி அரசும், வெங்காயத்தின் விலையை குறைக்க எந்த உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
கண்டன ஆர்பாட்டம்
அக்கட்சியின் மகளிர் அணி சார்பில் வெங்காய விலையை கட்டுப்படுத்தக் கோரி டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. டெல்லியில் வெங்காய விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
குஜராத்தில் போராட்டம்
இதுபோல், குஜராத் மாநிலம் ராஜ்காட் நகரிலும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. வெங்காயம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்கக் கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.
அரசியலாகும் வெங்காயம்
வெங்காய விலை உயர்வை கையில் எடுத்துக்கொண்டு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளதால், மத்திய அரசு வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.