ஆன்லைன் ஆப் கடன்.. குறுஞ்செய்தி அவமானம்.. இளைஞர் தற்கொலை.. கொதிக்கும் உறவினர்கள்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆன்லைன் ஆப்பில் கடன் வாங்கிய வாலிபர், கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனால் ஆன்லைன் ஆப் நிறுவனம், நண்பர்கள் அனைவருக்கும் கடனை செலுத்தாதவர் என குறுஞ்செய்தி அனுப்பியதால், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆன்லைன் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பழையனூர் சாலை கிராமத்தை சேர்ந்தவர் விவேக் (27) என்ற ரங்கநாதன். இவர் மாமண்டூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் லோடுமேன் ஆக பணிபுரிந்து வருகிறார்.
விவேக தன்னுடைய தந்தையின் மருத்துவ செலவுக்காக
. தனியார் ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கி உள்ளார். ஆன்லைன் ஆப் மூலம் 4000 ரூபாய் கடன் பெற்றுள்ளார் ஆனால் இந்த கடனை செலுத்த காலதாமதம் ஆகி இருக்கிறது.
மானத்தை வாங்குவோம்
கடன் கொடுத்த அந்த நிறுவனம் கஸ்டமர் கேர் மூலம் இவரை தொடர்பு கொண்டு நீங்கள் கடனை செலுத்தவில்லை என்றால் உங்களை பற்றி அவதூறாக குறுஞ்செய்தியாக உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உங்கள் மானத்தை வாங்கி விடுவோம் என எச்சரித்துள்ளார்கள்.
தற்கொலை
இதனை அடுத்து இன்று அந்த ஆன்லைன் நிறுவனம் குறுஞ்செய்தியை இவருடைய நண்பர்களுக்கு செய்தியாக அனுப்பியுள்ளனர் இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் விவேக்கிற்கு போன் செய்து விசாரித்துள்ளனர் இதனால் மனமுடைந்த விவேக் பழையனூர் சாலை கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதியில் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தற்கொலைகள்
வங்கிகள் மற்றும் கந்துவட்டிக்காரர்களிடம் அதிக அளவு கடன் வாங்கி கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து கொண்டே இருக்கிறது. அந்த லிஸ்டில் புதிதாக ஆன்லைன் ஆப் கடனும் இணைந்துள்ளது.
அனைத்து தகவலும் கிடைக்கும்
ஆன்லைன் ஆப் மூலம் ஒருவரின் பான் நம்பரை அடிப்படையாக வைத்து கடன் கொடுக்கிறார்கள். கடன் கொடுப்பதற்கு முன்பு அவரது செல்போனில் உள்ள தொடர்புகள், புகைப்படங்கள், ஆப்கள் என அனைத்தையும் பார்க்க அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் கடன் கிடைக்கும். இதன் மூலம் கடன் வாங்கியவரின் அனைத்து தகவலும் ஆப் நிறுவனத்திற்கு கிடைத்துவிடும்.
அதிக வட்டியுடன் வசூல்
அவர்கள் அதிக வட்டி மற்றும் கட்டணங்கள் வசூலித்து கடனை திருப்பி வாங்கி விடுவார்கள். தராவிட்டால் கடன் வாங்கியவரின் தொடர்பு எண்ணுக்கு கடனை திருப்பி செலுத்தாதவர் என எஸ்எம்எஸ் அனுப்புவார்கள். இந்த அவமானத்திற்கு பயந்து கடனை திருப்பி செலுத்திவிடுவார்கள். இதுதான் ஆப் நிறுவனங்கள் கொடுத்த கடனை வசூலிக்க எடுக்கும் நடவடிக்கையாகும். இதனிடையே உயிரிழந்த விவேக்கின் உறவினர்கள், ஆன்லைன் ஆப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.