பொங்கலுக்கு வண்டலூர் செல்கிறீர்களா?... அப்போ ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணுங்க குட்டீஸ்!
பொங்கல் பண்டிகைக்கு வண்டலூர் பூங்காவுக்கு வரும் மக்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
காஞ்சிபுரம் : பொங்கல் பண்டிகை முன்னிட்டு வண்டலூர் பூங்காவுக்கு வரும் தரும் மக்களின் வசதிக்காக ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான பறவைகள், விலங்குகள் என உள்ளன. இங்கு சனி, ஞாயிறுகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
மனித குரங்குகள், யானை, ஓட்டகசிவிங்கி உள்ளிட்ட விலங்குகளை பார்க்க ஏராளமானோர் பூங்காவுக்கு வருகை தருவது வழக்கம். மேலும் ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை அன்று கூட்டம் அதிகரிக்கும் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம்.
கூட்ட நெரிசல்
பொங்கல் பண்டிகை 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பூங்காவில் டிக்கெட் வாங்கும் இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்படும்.
நுழைவு சீட்டு மையங்கள்
மேற்கண்ட தேதிகளில் பூங்கா காலை 8 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும். பொதுமக்கள் கஷ்டமின்றி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
வனத்துறை, காவல் துறை
பொதுமக்கள் அதிகம் கூடுவர் என்பதால் அசம்பாவிதங்களை தடுக்க வனத்துறை மற்றும் காவல் துறை சார்ந்தவர்கள் சாதாரண உடையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பர். இது தவிர 32 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
தணிக்கை தீவிரம்
பூங்கா விலங்குகளுக்கு பார்வையாளர்கள் நொறுக்குத்தீனிகளை போடுவதால் அவற்றுக்கு உடல்நலம் பாதிக்கப்படுகிறது. மேலும் கவருடன் போடும் தின்பண்டங்களால் அவை தொண்டையில் சிக்கி உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க நொறுக்குத் தீனி, தின்பண்டங்களுக்கு அனுமதி கிடையாது. இதை தணிக்கை செய்ய சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,500 வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு கூடுதலாக இடம் அமைக்கப்பட்டுள்ளது.