இனி திருச்சியிலும் “ஆன்லைன் விசா” - 75 நாடுகளுக்கு... 15ம் தேதி முதல் அமல்
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ஆன்லைன் விசா வழங்கும் சேவை வரும் 15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவில் சுற்றுலா விசா பெற வேண்டும் என்றால் இந்திய தூதரகத்தை அணுகி அதற்கான ஆவணங்களை அளித்து நீண்ட நாட்களுக்கு காத்திருக்க வேண்டியிருந்தது.
குறைந்தது 30 நாட்களுக்கு மேல் முழுமையான விசாரணைக்கு பிறகு விசா பெறுவது நடைமுறையில் இருந்து வந்தது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வர தயக்கம் காட்டி வந்தனர்.
சுற்றுலாவிற்கு ஊக்கம்:
இந்த நிலையில், மத்திய அரசின் குடியுாிமை துறை வெளிநாட்டு பயணிகளின் சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக ஆன்லைன் விசாவை அறிமுகம் செய்தது.
ஆன்லைன் விசா அறிமுகம்:
முதற்கட்டமாக மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம், கொச்சி, கோவா ஆகிய 9 விமான நிலையங்களில் ஆன்லைன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
திருச்சிக்கும் அனுமதி:
இதை தொடர்ந்து ஜெய்ப்பூர், லக்னோ, கயா, அகமதாபாத், திருச்சி, அமிர்தசரஸ் ஆகிய விமான நிலையங்களில் ஆன்லைன் விசா வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் ஆன்லைன் விசா வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
முடுக்கி விடப்பட்ட உட்கட்டமைப்பு பணிகள்:
இந்நிலையில் புதிய முனையத்தில் விமானநிலைய நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு பணிகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது. தொடர்ந்து அதற்கான மென்பொருள், கேமரா, பையோ மெட்ரிக் ஆகியவை பொருத்தப்பட்டு வருகிறது.
75 நாடுகளுக்கு ஆன்லைன் விசா:
இதில் 75 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்க உள்ளதால் அந்த நாடுகளின் மென்பொருள் வருவது மட்டுமே காலதாமதம். வரும் 15ம் தேதி ஆன்லைன் விசா வழங்கும் சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.