நெல்லித்தோப்பு தொகுதியில் முதன்முறையாக ஆன்லைனில் வாக்குப்பதிவு
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நெல்லித்தோப்பு தொகுதியில் ஆன்லைன் தபால் வாக்குப்பதிவு முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் நெல்லித் தோப்பு தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் முதன் முறையாக ஆன்லைன் மூலமாக தபால் வாக்குப்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் போட்டியிடுகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக கட்சிகள் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளன.
இந்த நிலையில் தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த தேர்தலில் ஆன்லைன் மூலமாக தபால் வாக்குப்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அரசு அலுவலர்கள் தபால் மூலம் வாக்களிப்பதில் ஏற்படும் கால விரயத்தை குறைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தொழில் நுட்ப சோதனைகளை மேற்கொண்ட பின்பு இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.