வறட்சிக்கு 17 பேர் மட்டும்தான் செத்தார்கள்... அண்ட புளுகை அள்ளிவிடும் தமிழக அரசு
தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சிக்கு 17 பேர் மட்டும்தான் மரணம் அடைந்தார்கள் என்று தமிழக அரசு ஏற்கனவே சொன்ன புளுகை இன்னும் அள்ளிவிட்டுக் கொண்டிருப்பது விவசாயிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
சென்னை: வறட்சியின் காரணமாக 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணம் அடைந்துள்ள நிலையில், தமிழக அரசு 17 பேர் மட்டும்தான் மரணம் அடைந்தார்கள் என்று கூறியது. அதே போன்று இன்று வறட்சியால் தமிழகம் பாதிக்கப்படவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த வறட்சியால் பயிர்கள் கருகியதைக் கண்டு 400க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பாலும் மரணம் அடைந்துள்ளனர்.
விவசாயிகள் தற்கொலை
வறட்சியின் காரணமாக 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் விவசாயிகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
17 பேர் மட்டும் இறப்பு
வறட்சியால் தமிழகத்தில் விவசாயிகள் இறக்கவில்லை என்று தமிழக அரசு அப்பட்டமாக பொய் சொன்னது. மேலும் வறட்சிக்கு 17 பேர் மட்டும் பலியானார்கள் என்று அறிவித்த தமிழக அரசு அவர்களுக்கு மட்டும் நிவாரணத் தொகை அளிப்பதாக கூறியது.
இறந்தோர் புகைப்படத் திறப்பு
இதனைக் கண்டிக்கும் வகையில் தற்கொலை மற்றும் மாரடைப்பால் மரணம் அடைந்த 300 விவசாயிகளின் புகைப்படங்களை சென்னையில் திறந்து வைத்து அஞ்சலி நிகழ்ச்சி நடத்தினார் விவசாய சங்கத் தலைவர் பி. ஆர். பாண்டியன். மேலும், இறந்தவர்களின் முகவரியோடு பட்டியலையும் வெளியிட்டார்.
அண்ட புளுகு
ஆனால், திருந்தாத தமிழக அரசு தொடர்ந்து தமிழகத்தில் வறட்சி இல்லை என்றும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அண்டப் புளுகை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வறட்சி இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் இன்று தமிழக இன்று தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாரை காப்பாற்றுகிறது தமிழக அரசு
140 ஆண்டில் இல்லாத வறட்சி தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. அதனை இல்லை என்று சொல்லி தமிழக அரசு யாரை காப்பாற்ற முனைகிறது என்பதுதான் தற்போது எழுந்துள்ள பெரிய கேள்வி.