500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற "ஒன்லி 2 டேஸ்".. நெருக்கடியில் பொதுமக்கள்.. வங்கிகளில் கூட்டம்
பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற இன்னும் 2 நாட்களே உள்ளதால் வங்கிகளில் கூட்டம் அலை மோதும் உருவாகியுள்ளது.
சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளுக்குச் சென்று மாற்றிக் கொள்ள டிசம்பர் 30ம் தேதி கடைசி நாள் என்பதால் வங்கிகளை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த மாதம் 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், மக்கள் கையில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கி, மற்றும் அஞ்சலகங்களில் கொடுத்து புதிய நோட்டுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
இதனையடுத்து, பொதுமக்கள் தங்கள் கையில் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகள், அஞ்சலகங்களில் கொடுத்து மாற்றி வந்தனர். அதுவும் நான்காயிரம் ரூபாய் வரை மட்டுமே மாற்றித் தரப்படும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். குறைந்தபட்ச பணத்தை மாற்றக் கூட நாள் கணக்கில் வங்கி வாசல்களில் மக்கள் காத்துக்கிடந்தனர். இந்தியா முழுவதும், பணத்தை மாற்ற வங்கி வாசல்களில் காத்திருந்த போது சுமார் 100 பேர் உயிரிழந்தனர்.
டிசம்பர் 30ம் தேதியோடு, பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றுவது நிறுத்தப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது, அதன்படி, பழைய நோட்டுக்களை மாற்ற இன்னும் 2 நாட்களே உள்ளன. 30 தேதிக்கு மேல் பழைய நோட்டுக்களை கையில் வைத்திருப்பது விதியை மீறிய செயலாகும் என்றும் அதன் பிறகு மாற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளதால், மக்கள் தங்கள் கையில் உள்ள பழைய நோட்டுக்களை மாற்ற வங்கிகளில் கூடியுள்ளனர். நாளை மற்றும் நாளை மறுதினத்திற்கு கூட்ட நெரிசல் அதிகம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் வங்கி வட்டாரங்கள் கூறுகின்றன.
டிசம்பர் 30ம் தேதியோடு பழைய நோட்டுக்களை மாற்றுவது நிறுத்தப்படும் நிலையில், பண மதிப்பு நீக்கம் தொடர்பாக விவாதம் நடத்த இன்று டெல்லியில் அமைச்சரவை கூடுகிறது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.