கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை கடைசி 3-வது இடத்துக்கு தள்ளிய நீட் கொடுங்கரம்!
நீட் தேர்வில் தமிழகம் 35-வது இடம் என்பது திட்டமிட்ட அவமானப்படுத்துதல்.
Recommended Video
சென்னை: நினைக்க நினைக்க நெஞ்சு பதறுகிறது... உலகம் முழுவதும் தமிழ்நாட்டு கல்வி கூடங்களில் அதுவும் அரசு பள்ளிகளில் படித்து இன்று லட்சக்கணக்கானோர் வெளிநாடுகளில் கோலோச்சி வருகின்றனர்.
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் படிப்பறிவற்றவர்கள்; அவர்களுக்கு கல்வித் தகுதியே கிடையாது என கூனிக் குறுக வைத்திருக்கிறது நீட் தேர்வு முடிவுகள். தமிழகத்துக்கு 35-வது இடமாம்... அதாவது கடைசியில் இருந்து 3-வது இடமாம்,
37-ல் நாகாலாந்து; 36-ல் டையூ டாமன்... தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கை 1,14,302. ஆனால் தேர்ச்சி பெற்றோர் வெறும் 45336. அதாவது 40% மட்டுமே.
எஞ்சிய 60% மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். கடந்த காலங்களைப் போல பிளஸ் டூ தேர்வில் 1100க்கும் மேல் நல்ல மதிப்பெண் எடுத்து இயல்பாக மருத்துவ படிப்பு கிடைக்க வேண்டிய விழுப்புரம் பிரதீபா போன்றவர்கள் தோல்வியைத் தழுவி இன்று மரணித்துப் போய்விட்டனர்.
தமிழ்நாட்டு மாநில கல்வி முறையில் பயின்ற கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்கும் என தலையால் அடித்து சொல்லியும் அனிதா தன் உயிரையே மாய்த்த போதும் கேளா அரசாக மத்திய அரசு இருந்து வருகிறது. இப்போது விழுப்புரம் பிரதீபா மாண்டு போய் விட்டார்.
விழுப்புரத்து கீர்த்திகா மாண்டு போக முயற்சித்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய அநீதி?
கல்வியில் சிறந்த தமிழகத்தை கட்ட கடைசிக்கு தள்ளி டெல்லி கொடூரமாக சிரிக்கிறது.. இது நம்மை திட்டமிட்டு அவமானப்படுத்துகிற கல்வித் தரப்படுத்துதல் என்பது அல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்? நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும் நீட் எனும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு!