கமிஷனர் அனுமதியோடு மட்டுமே குட்கா முறைகேடு நடக்க முடியாது.. என்ன சொல்ல வருகிறார் ஜார்ஜ்?
Recommended Video
சென்னை: குட்கா உற்பத்தியாளர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்ட விரோதமாக உற்பத்தி மற்றும், விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குட்கா உற்பத்தியாளர் மாதவராவ் குடோனில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில், ஜார்ஜ் பெயரும் இருந்ததால் சிபிஐ நேற்று முன்தினம் அவர் வீட்டில் ரெய்டு நடத்தினர்.
இந்த நிலையில், ஜார்ஜ் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில் 300 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இவ்வளவு பெரிய முறைகேடு யாருக்கும் தெரியாமல் நடந்திருக்குமா. கமிஷனர் அனுமதியோடு மட்டும் இப்படி குட்கா முறைகேடு நடந்திருக்க முடியுமா?
எனது உயர் அதிகாரிகள் என்னை பற்றி நல்ல ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். 'அப்ரைசல்' கடிதங்களில் நான் கடினமானவன் என்று உயர் அதிகாரிகள் கூறியுள்ளனரே தவிர நான் திறமையானவன் என்பதை அவர்கள் குறிப்பிட தயங்கவில்லை.
நான் ஆணையராக வந்தபோது குட்கா தொடர்பான வதந்திகள் பரப்பப்பட்டன. ஆணையராக இருந்தபோது குட்கா தொடர்பாக விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கையளித்தேன். உரிய விசாரணை நடத்த அரசுக்கு பரிந்துரைத்தது நான்தான். துணை ஆணையர் ஜெயக்குமாருக்கு பல பொறுப்புகளை கொடுத்தேன். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.
உயர் அதிகாரிகளிடம் அவர் முறைகேடு குறித்து சரியாக ரிப்போர்ட் அளிக்கவில்லை. எனவே, பணி விவர அறிக்கையில் ஜெயக்குமாருக்கு எதிரான அறிக்கையை கொடுத்தேன். குட்கா விஷயத்தில் என்னை குறி வைத்து, செயல்படுவது வருத்தமாக உள்ளது. நான் டிஜிபியாக பதவிக்கு வர வேண்டிய நேரத்தில்தான் வதந்தி பரப்பப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதேநேரம் தனது பேட்டியில், குட்கா முறைகேடே நடக்கவில்லை என்றும் கூற முடியாது. நடந்துள்ளது என்றும் ஜார்ஜ் தெரிவித்தார். எப்படி நடந்திருக்க முடியும் என்ற ஜார்ஜ், பேட்டியின் ஒரு பகுதியில் நடந்திருக்கிறது என்றும் தெரிவித்தார். ஆக, தனக்கு மட்டுமே இதில் பங்கு இல்லை என்பதுதான் இவர் பேட்டியின் சாராம்சமா என்று பத்திரிகையாளர்கள் முனுமுனுத்தனர்.