நிகர்நிலை பல்கலை. மருத்துவ படிப்புக்கு ஆண்டுக்கு ரூ13 லட்சம்தான் கல்வி கட்டணம்: ஹைகோர்ட் அதிரடி
Recommended Video
சென்னை: மருத்துவ படிப்புக்கு நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ரூ.13 லட்சம் கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஜவஹர் சண்முகம் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவ பல்கலைக்கழகங்களை தாண்டி, நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் பல மெடிக்கல் கல்லூரிகளை நடத்தி வருகிறது. இங்கு மாணவர்களிடம் பல லட்சம் நன்கொடை வாங்கி வருகிறார்கள். எம்பிபிஎஸ் சீட்டுக்கு ரூ.40 லட்சம் என்ற அளவுக்கெல்லாம் நன்கொடை வசூலிக்கப்பட்டது.
நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தங்களை யாரும் தட்டி கேட்க முடியாது என்ற மனநிலையில் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில்தான் ஜவகர் சண்முகம் தாக்கல் செய்த மனுவில், கட்டணத்தை நிர்ணயிக்க குழு அமைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த இந்திரா பானர்ஜி அமர்வு, வருடத்திற்கு ரூ.13 லட்சம் அதிகபட்சமாக கட்டணமாக வசூலிக்கலாம், கட்டண நிர்ணயம் தொடர்பாக ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியை பொருத்தளவில், ஆண்டுக்கு ரூ.10 லட்சம் அளவுக்குதான் அதிகபட்ச கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.