காந்தி ஜெயந்தி அன்று ரயில்களில் கறி சோறு இல்லை.. சாம்பார் ரைஸ், கர்ட் ரைஸ் + ஊறுகாய் மட்டுமே!
டெல்லி: மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி சைவ உணவுகளை மட்டும் விநியோகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினத்தில் ஆண்டுதோறும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மதுபான கடைகள் மூடப்படும்.
இந்நிலையில் காந்தி ஜெயந்தி அன்று ரயில்களில் சைவ உணவு மட்டுமே வழங்குவது என ஐஆர்சிடிசி முடிவு செய்து அதை ரயில்வே துறைக்கு அனுப்பியுள்ளது. இதன் இறுதி முடிவை அத்துறை எடுக்கும்.
இந்த பரிந்துரை ரயில்வே துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் ராஜதானி, சதாப்தி மற்றும் டூராண்டோ ஆகிய விரைவு ரயில்களில் அமல்படுத்தப்படும். ஏனெனில் இந்த மூன்று ரயில்களில் பயணச் சீட்டுடன் சேர்த்து உணவுக்கான கட்டணமும் பெறப்படுகிறது.
எனினும் இந்த ரயில்களில் பயணம் மேற்கொள்ளவுள்ள பயணிகளுக்கு சற்று குழப்பம் நிலவுகிறது. அதாவது பயணம் என்பது அக்டோபர் 1 அன்று தொடங்கி 2-ஆம் தேதி முடிவடையும். இல்லாவிட்டால் அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கி 3-ஆம் தேதி முடிவடையும்.
டெல்லி- பெங்களூரு, டெல்லி- சென்னை மற்றும் டெல்லி- திருவனந்தபுரம் ஆகிய நீண்ட தூரம் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் மேற்கண்ட 3 தேதிகளிலும் பயணம் செய்யக் கூடும். இதுகுறித்து ஐஆர்சிடிசி அதிகாரி கூறுகையில் அக்டோபர் 1-ஆம் தேதி அசைவ உணவும், அக்டோபர் 2-ஆம் தேதி சைவ உணவும் வழங்கப்படும் என்று விவரித்துள்ளார்.