ஊட்டியில் ராஜீவ் சிலை திறப்பு... எதிர்ப்பு காரணமாக உம்மன் சாண்டி வரவில்லை!
ஊட்டி: ஊட்டியில் இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதாக இருந்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடைசியில் வரவில்லை.
ஊட்டியில் காலநிலை மோசமாக இருந்ததால், ஹெலிகாப்டர் இறங்க முடியாத சூழல் நிலவியதாகவும், அதனால், உம்மன் சாண்டியின் ஊட்டி வருகை ரத்து செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின.
ஊட்டியில் ராஜீவ் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் ,முன்னாள் எம்.பி., ஆருண், நடிகை குஷ்பு, நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கணேஷ், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜூ மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துக் கொண்டு சிலையை திறந்து வைத்தனர்.
முன்னதாக இவ்விழாவுக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஊட்டியில் காலநிலை மோசமாக இருந்ததால், ஹெலிகாப்டர் இறங்க முடியாத சூழல் நிலவியதாகவும், அதனால், உம்மன் சாண்டியின் ஊட்டி வருகை ரத்து செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.
இருப்பினும் முல்லை பெரியாறு அணை அருகே 2 புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள சூழ்நிலையில் அதற்க்கான முயற்சியில் அவர்கள் இறங்கியிருப்பதால் கடுமையான எதிர்ப்புக்கள் உருவாகும் என்பதைக் கருத்தில் கொண்டே சாண்டி வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, உம்மன் சாண்டி ஊட்டி வருகை தருகிறார் என்ற தகவல் அறிந்து அவரது வருகையை கண்டித்து, பெரியார் திராவிட கட்சி சார்பில் கறுப்பு கொடி ஆர்பாட்டம் நடத்த முயற்சிகள் மேற்கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.