எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்.. இது ஊட்டி மலை "ப்யூட்டி" ரவியின் கதை!
சாலையில் சுற்றித்திரிந்தவருக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் உதவி புரிந்துள்ளார்.
உதகை: இடம்- ஊட்டி மெயின்ரோடு
கறுத்த நிறம் - சீப்பு பார்த்தே மாத மாதங்களான பரட்டை தலை - அழுக்கு உடம்பு - தலை முதல் கால் வரை அழுக்கு துணியால் உடலை மூடியவாறு ஊட்டி சாலையில் ஒருவர் சென்று கொண்டிருக்கிறார்.
அந்த வழியாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெனட் திவ்யா ஆய்வு பணிகளை மேற்கொள்ள காரில் கொண்டிருக்கிறார். அப்போது, இந்த நபரை பார்க்கிறார். ஒரு நிமிடம் தனது காரை நிறுத்த சொல்கிறார். அந்நபரை அழைத்து பேசுகிறார், "சாலையில் ஏன் உங்களை போன்ற இளைஞர்கள் வெட்டித்தனமாக இந்த கோலத்தில் இப்படி திரிகிறீர்கள்?" என வேதனையுடன் கேட்கிறார்.
அதற்கு அந்த நபர் ஆங்கிலத்தில் பதிலளித்ததும் ஒரு கணம் அசந்தே போய் விட்டார் ஆட்சியர். அவரது ஆங்கில புலமையை கண்டு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டுமே என முடிவெடுக்கிறார்.
உடனடியாக, நகராட்சி ஆணையாளர் ரவியிடம், அந்நபரின் வாழ்வாதாரத்துக்கு ஏற்பாடு செய்ய சொல்ல உத்தரவிடுகிறார். ஆணையாளரோ, உதகையில் டாக்டர் அப்துல்கலாம் பெயரில் பல சமூக பணிகளை குறிப்பாக கல்வி மற்றும் பசுமை பணிகளை செய்து வரும் தஸ்தகீர் என்பவரிடம் ஒப்படைத்தார்.
மாவட்டத்தில் பல்வேறு காரியங்களை செய்து மக்களின் நன்மதிப்பை பெற்ற தஸ்தகர், அந்த நபரை அழைத்து சென்று முடி வெட்ட ஏற்பாடு செய்கிறார். பிறகு புதிய உடை அணிவிக்க செய்தார். அந்நபர் பசியோடு இருந்ததால் உணவு வாங்கி கொடுத்தார்.
அவரை அழைத்து கொண்டு தஸ்தகர் ஆட்சியர் முன் கொண்டு போய் நிறுத்தினார். இப்போது ஆளே மாறிப்போய் காணப்பட்ட அந்நபரை கண்டதும் ஆட்சியர் இனம் புரியாத மகிழ்ச்சியடைந்தார். அத்துடன் அந்த நபருக்கு வாழ்வாதாரத்திற்காக சாலையோரம் ஒரு கடை வைத்து கொடுக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார். ரவி என்னும் அந்த நபர் ஊட்டி லாரன்ஸ் பள்ளியில் படித்திருக்கிறார் என்றும், படிக்கும்போதே தவறான பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டதால் வீட்டைவிட்டு பெற்றோர் இவரை அனுப்பிவிட்டதால் விரக்தியில் இப்படி திரிந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக பொதுமக்கள் கண்முன்னாலேயே அலங்கோலத்துடன் இங்கும் அங்குமாய் திரிந்து கொண்டிருந்தவர், இன்று டிப்டாப்-ஆக மாறி ஒய்யாரமாக நடைபோடுவதை அப்பகுதி மக்கள் வியப்போடு பார்க்கின்றனர். இதனால் நீலகிரி மாவட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமான ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் சமூக சேவகர் தஸ்தககீருக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.