ஊட்டியில் பல இடங்களில் மண் சரிவு.. மலை ரயில் 3 நாட்களுக்கு ரத்து!
3 நாட்களுக்கு மலை ரயில் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி: பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் ஊட்டி மலை ரயில் இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நிறைய இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும் மரங்கள் வேரோடு சாலைகளில் விழுந்து போக்குவரத்து அதிகமாகவே பாதிக்கப்பட்டு வருகிறது, இதை தவிர வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டு வருகிறது.
[ஏன் இதை இப்போது பேசுகிறார் ஆளுநர்.. ஏதோ விஷயம் இருக்கு.. துரைமுருகன்]
பனிமூட்டம்
மேலும் நீலகிரியில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ற எச்சரிக்கை ஏற்கனவே விடப்பட்டுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. பலத்த மழை பெய்து வருவதுடன், மாவட்டத்தில் பனிமூட்டமும் நிறைந்து காணப்படுகிறது.
நடுகாட்டில் நின்ற ரயில்
இதனால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரிவதில்லை. இதனால்தான் நீலகிரிக்கு சுற்றுலா வருவதை பொதுமக்கள் 3 நாட்களுக்கு தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. இந்த நிலையில், மலைரயில் ஒன்று எஞ்சின் கோளாறு ஆகி நடுகாட்டில் நின்றுவிட்டது. 210 சுற்றுலா பயணிகளுடன் மேட்டு பாளையத்திலிருந்து நேற்று கிளம்பியது. ஆனால் பாதி வழியிலேயே எஞ்சின் கோளாறு ஆகிவிட்டது.
மாற்று ரயில்
ஏற்கனவே கனமழையில் தவித்த பயணிகள், கோளாறு காரணமாக ரொம்பவே அவதிப்பட்டு விட்டனர். கிட்டத்தட்ட 6 மணி நேரம் குளிரிலும், மழையிலும் பிள்ளைகளை வைத்துக் கொண்டு தவித்தனர். அதன்பின்னர்தான் மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு அனைவரும் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டனர்.
3 நாள் ரத்து
இதை தவிர பல இடங்களில் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பலத்த மழை எச்சரிக்கை மற்றும் மண்சரிவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஊட்டி மலை ரயில் இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.