டோர்னியர் விமான விபத்தால் ஒத்தி வைக்கப் பட்ட ‘ஆப்ரேஷன் ஆம்லா’ மீண்டும் தொடங்கியது!
சென்னை: தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் ஆப்ரேஷன் ஆம்லா எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கியுள்ளது.
மத்திய அரசின் கடற்படை, கடலோர காவல் படை, மாநில அரசின் கடலோர காவல் குழுமம் மற்றும் காவல்துறையினர் இணைந்து இந்த ஒத்திகையை நடத்துகின்றனர்.
கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவி அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். எனவே, கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க ஆண்டிற்கு இரண்டு முறை இந்த ஒத்திகை நடத்தப் படுகிறது.
அதன்படி, இந்தாண்டிற்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. தீவிரவாதிகள் வேடத்தில் ஊடுருவி வரும் கடலோர காவல்படை வீரர்களை, காவல்துறையினர் விழிப்போடு செயல்பட்டு பிடிக்க வேண்டும் என்பதே, இந்த பாதுகாப்பு ஒத்திகையின் செயல்பாடு ஆகும்.
தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த ஒத்திகை நிகழ்ச்சி நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி நடக்கவிருந்த பாதுகாப்பு ஒத்திகை, டோர்னியர் விமான விபத்தால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.