ஆர்.கே.நகர் வெற்றி- தினகரனை சிக்கவைக்க 'ரவுடி பினு ஆபரேஷனை' நடத்தியது போலீஸ்? பரபர தகவல்கள்
தினகரனின் வெற்றிக்காக மக்களை மிரட்டிய ரவுடிகளை ஒடுக்கவே பினு ஆபரேஷனை போலீஸ் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ரவுடிகள் துணையுடன் வெற்றி பெற்ற தினகரனை வீழ்த்தும் வகையில்தான் ரவுடி பினு ஆபரேஷனை வெற்றிகரமாக போலீஸ் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரனை வெற்றி பெற வைத்தாக வேண்டும் என்பதற்காக தீவிரமாக வியூகம் வகுக்கப்பட்டது. தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்பதால் முன்கூட்டியே சில பணிகளை தினகரன் அணி செய்திருந்தது.
அதில் முக்கியமானது ரவுடிகளை ஒருங்கிணைத்ததுதான். தேர்தலில் போட்டியிட்ட போது அதிகாரியை துப்பாக்கி முனையில் மிரட்டியவர் தலைமையில்தான் இந்த ரவுடிகள் ஒருங்கிணைக்கப்பட்டனர். அந்த பிரமுகரது கண்ணசைவில்தான் வடசென்னை ரவுடிகள் பலரும் செயல்பட்டும் வந்தனர்.
மக்களை மிரட்டிய பாலாஜி
இப்படி தினகரனுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களை மிரட்டிய போதுதான் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் தேர்தலின் போது சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆனாலும் ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவுடன் ரவுடிகள் துணையுடன் ஆர்கே நகரில் தினகரன் தரப்பு வலம் வந்தது.
அதிமுகவுக்கு தலைகுனிவு
வாக்குப் பதிவு நாளில் போலீஸ், துணை ராணுவத்தை நாங்கள் அசால்ட்டாக எதிர்கொண்டோம்ல என தங்க தமிழ்ச்செல்வன் வகையறாக்கள் பேசினாலும் உண்மையில் அன்று போலீசை சமாளிக்க ரவுடிகளைத்தான் நம்பியிருந்தது தினகரன் தரப்பு. பொதுமக்களை ரவுடிகள் கொண்டு மிரட்டியும் டோக்கன் கொடுத்து ஏமாற்றியும் தினகரன் தரப்பு அமோக வெற்றி பெற்றதால் அதிமுகவுக்கு பெரும் தலைகுனிவாகிப் போனது.
பினு ஆபரேஷன் பின்னணி
இதனால் அதிர்ந்து போன அதிமுக தினகரன் மீதான கோபத்தைவிட அவரது வெற்றிக்குக் காரணமானவர்களை குறிவைத்திருக்கிறது என கூறப்படுகிறது. இதன் ஒரு கட்டமாகவே ரவுடி பினு ஆபரேஷன் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்படுகிறது.
அடுத்த நடவடிக்கை
ஏனெனில் பினு ஆபரேஷனில் சிக்கிய பல ரவுடிகள் வடசென்னையை சேர்ந்தவர்கள். குறிப்பாக ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனுக்காக களமிறக்கப்பட்டவர்கள். இவர்களை 'செமையாக' கவனிக்க வேண்டும்; நடமாட விடக் கூடாது என்பதற்காக சிந்தாமல் சிதறாமல் அலேக்காக அத்தனை ரவுடிகளையும் தூக்கியிருக்கிறது போலீஸ். தினகரன் தரப்பில் இருந்து வரும் நெருக்கடிகள் அதிகரித்தால் இந்த ரவுடிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் பரபரப்பான நடவடிக்கைகளில் அரசு தரப்பு இயங்கவும் தயங்காது எனவும் கூறப்படுகிறது.