ஆபரேசன் எலிபண்ட்... சசி குடும்பத்தை ஸ்கெட்ச் போட்டு வளைத்த பின்னணி
ஆபரேசன் கிளீன் மணி என்றுதான் பெயரிட்டிருந்தார்கள். இப்போதோ ஆபரேசன் எலிபண்ட் என்று கூறுகிறார்கள்.
Recommended Video
சென்னை: சசிகலா குடும்பத்தை வருமானவரித்துறையினர் ஸ்கெட்ச் போட்டு வளைத்து பிடிக்க வைத்த பெயர் 'ஆபரேசன் எலிபண்ட்' என்பதாம். பூங்குன்றன் என்ற பொறியை வைத்து திமிங்கலங்களை பிடித்துள்ளது வருமானவரித்துறை.
புரட்சித்தலைவி அம்மா பெஸ்ட் சாரிட்டபிள் டிரஸ்ட், நமது எம்.ஜி.ஆர் பெஸ்ட் சாரிடபிள் டிரஸ்ட் என இரண்டு டிரஸ்ட்கள் இருக்கின்றன. ஜெயலலிதா மறைவிற்குக் பிறகு இந்த டிரஸ்ட்கள் பூங்குன்றன் வசம் இருந்தன.
சசிகலா பரோலில் வந்த போது இவற்றை கைப்பற்றுவதற்காக பத்திரங்களில் கையெழுத்து வாங்கினாராம். பத்திரப்பதிவாளர்களை போயஸ்கார்டனுக்கு அழைத்த விசயம் தெரிந்தே வருமானவரித்துறை அதிகாரிகள் மோப்பம் பிடித்தனர்.
சங்கேத வார்த்தை
இந்த வருமானவரி சோதனைக்கு சங்கேத வார்த்தைகளை பயன்படுத்தினார்களாம். 'ஆபரேசன் எலிபண்ட்' என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரி ஏய்ப்பு குறித்து வருவாய் நுண்ணறிவு பிரிவு மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அதன் பிறகே சோதனை நடத்தப்பட்டது என்று வருமானவரித்துறை அறிக்கை வெளியிட்டது.
ஆதாரம் சேகரித்த அதிகாரிகள்
கடந்த 2011ஆம் ஆண்டு சசிகலா போயஸ்கார்டனை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் டிசம்பர் 19ஆம் தேதியன்று ஸ்ரீஹரி சந்தனா எஸ்டேட், ஸ்ரீ ஜெயா பைனான்ஸ், ஜாஸ் சினிமாஸ் உட்பட 9 நிறுவனங்களுக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டார். மீண்டும் சசிகலா போயஸ்கார்டனுக்கு திரும்பிய பின்னர் 2013ஆம் ஆண்டு அனைத்து பொறுப்புகளும் பூங்குன்றன் வசமிருந்து பறிக்கப்பட்டது.
கோடீஸ்வரரான பூங்குன்றன்
2011ஆம் ஆண்டுக்குப் பிறகு பூங்குன்றன் பல தொழில்களில் 100 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்துள்ளார். இதனை வருமானவரித்துறையினர் மோப்பம் பிடித்துள்ளனர். வலுவான ஆதாரங்களுடனேயே பூங்குன்றன் வீட்டிலும், போயஸ்தோட்டத்தில் உள்ள வீட்டு அறையிலும் சோதனை நடத்தியுள்ளனர்.
போட்டுக்கொடுத்த பூங்குன்றன்
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் சசிகலாவின் 4 அறைகள் மற்றும் பூங்குன்றனின் ஒரு அறையில் சோதனை செய்யப்பட்டது. அந்த அறைகளின் சாவிகள் இளவரசியின் மருமகனான ராஜராஜனிடம் இருந்து பெறப்பட்டது. ஜெயலலிதாவின் அறையில் சோதனை நடத்தப்படவில்லை என்று வருமானவரித்துறையினர் கூறியுள்ளனர்.
போலி நிறுவனங்கள்
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த தொடர் சோதனையில் 70க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 17 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பென் டிரைவ்கள் மற்றும் லேப்டாப் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சோதனை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்று அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதிரடி நடவடிக்கைகள் தொடரும்
சசிகலா குடும்பத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இதோடு நிற்கப் போவதில்லையாம் ஏனெனில் ஒரு ஆவணத்தை ஆராய்ந்தால் அது அனுமார் வால் போல அடுத்தடுத்த ஆட்களை கை காட்டுகிறது. ஆணிவேர் ஒன்று என்றாலும் சல்லிவேர் கிளைகள் தமிழகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளனர். டிரஸ்ட் தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளதால் ஆடித்தான் போயுள்ளது சசிகலா, இளவரசி குடும்பம்.